90சு. சமுத்திரம்
களுக்கு ஸ்பெஷல் ‘கோச்சிங்’ நடத்த வேண்டும். இதே போல் இவர் மச்சான், கோவிந்தன் வகுப்புக்கும். சில ஆசிரியர்கள் ஆசிரியப் பணி அல்லாத தங்கப்பாண்டியின் காரியங்களுக்கு அனுப்பப்படும்போதும், அவர்கள் வகுப்புகளுக்கும் ‘கோச்சிங்’ எடுக்க வேண்டும்.
சீனிவாசன், ஒரு கழித்தல் கணக்கைப் போட்டுவிட்டு வகுப்பதிரக் கேட்டார்.
“சைபருக்கு ஒன்பது போகுமாடா?”
“போகாது ஸார்...”
“போகாட்டா என்ன பண்ணனும்?”
“இரண்டாவது ஸ்தானத்துல கடன் கேட்கணும்.”
“எப்படிக் கேட்கணும்? புண்ணாக்குக் கழுதைகளா! சொல்லிக் கொடுத்தது மறந்துபோச்சா? சொல்லுங்கடா. எப்படிச் சொல்லணும்? ஓ... இரண்டாவது...”
பிள்ளைகள் திருப்பிச் சொன்னார்கள்: “ஏ... இரண்டாவது ஸ்தானத்துல இருக்கிற இரண்டே! ஒரு பத்தை கடன் தா... ஒரு பத்தை கடன் தா...”
“என்ன தா...?”
“ஒரு பத்தைக் கடன் தா... ஒரு பத்தைக் கடன் தா...”
சீனிவாசனுக்கு திடீரென்று கோபம் வந்தது.
“ஏ கடன்காரப் பசங்களா! இனிமேல் கடன் தா, கடன்தான்னு சொல்லப்படாது. நான் சொல்றது மாதிரி சொல்லணும். நல்லா கவனிங்க. ஏ இரண்டாவது ஸ்தானத்துல இருக்கிற இரண்டே... ஒன்கிட்ட இருந்து, ஒரு பத்தைப் பறிக்கப் போறேன். எதைப் பறிக்கப் போறேன்? சொல்லுங்கடா...”
சிறுவர்–சிறுமியர் உற்சாகமாகக் கத்தினார்கள். “ஒரு பத்தைப் பறிக்கப் போறேன்... ஒரு பத்தைப் பறிக்கப் போறேன்...”