உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கேள்வித் தீ93

“ஏன் சரசு, வாத்தி வேலயில் முந்நூறு ரூபாயாவது கிடைக்கும். இன்னுமா கூலிக்கு தண்ணி எடுக்கணும்?”

“இவள் கூலிக்கு தண்ணி பிடிக்கலடி. அந்தப் பள்ளிக் கூடத்தில் வேல கிடைச்சதுக்கு லஞ்சமா தண்ணி எடுக்காள். இவளால ஐயாயிரம் கொடுக்க முடியாது பாரு. அத... தண்ணியா தீர்த்துக் கட்டுறாள்.”

“சர்க்கார் பணத்தத்தான் சம்பளமா வாங்குகிறாள். இதுக்கு எதுக்கு தண்ணி எடுக்கணும்?”

“ராசம்மாவோட திமிரப் பாரேன்? நாம ‘மெய்க்கணுமுன்னு’... இவள அதட்டிட்டுப் போறாள். அதாவது படிச்ச பெண்ணு தன்கிட்ட வேலக்காரியா இருக்கத காட்டிக்கிறாளாம்.”

“எல்லாம் இவளால். இவள் எதுக்கு இன்னும் பழைய வேலைக்காரியா நடந்துக்கணும்? தலயயா வாங்கிடுவாங்க? ஊசி... இடங்கொடுக்காமே, நூல் நுழையுமா? கொடுப்பாரக் கண்டால் பய பிசாசு கொனச்சி கொனச்சி ஆடுமாம்.”

“மேயுற மாட்டக் கெடுக்குமாம், நக்குற மாடு. ஒனக்கென்ன அம்மாளு... இவா பாடு, அவா பாடு.”

ஒவ்வொரு தடவையும், கயிற்றை கிணற்றுக்குள் விடும்போதும் தானே அந்தக் கிணற்றுக்குள் விழுவதுபோல், சரஸ்வதி தவித்தாள். முன்பு லேசாகத் தெரிந்த அந்த டின், இப்போது தூக்க முடியாத சுமையாகத் தெரிந்தது இந்தப் பெண்கள் சொல்வதுபோல், ராசம்மா தன்னை அதட்டிவிட்டுப் போனது அவளுக்கு அடிமைத்தனமாகத் தெரிந்தது. இவ்வளவுக்கும், மானேஜர் மற்றவர்கள் சம்பளத்தில் ஐம்பது ரூபாய் பிடித்தால், தன் சம்பளத்தில் நூறு ரூபாய் பிடிப்பதும், அப்போது