உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

கலியாணி வாணிதாஸபுரம் என்பது ஒரு பூலோக சுவர்க்கம். ஆனால், இந்த சுவர்க்கத்தில் ஒரு விசேஷம். மேலே இருக் கும் பௌராணிகரின் சுவர்க்கம் எப்படி யிருக்குமென்று அடியேனுக்குத் தெரியாது. ஆனால் இந்த சுவர்க்கத்தைப் பொறுத்தவரை, இது வாணியின் கடைக்கண் பார்வை ஒரு சிறிதும் படாத இடம் என்று எனக்குத் தெரியும். வாணிதாஸபுரத்திற்குப் போக வேண்டுமானால், ஜில்லா போர்டு ரஸ்தாவை விட்டு மாமரம் நிறைந்த வாய்க்கால் கரைமீது அரை பர்லாங்கு நடக்கவேண்டும். ரஸ்தாவின் கீழ்ப் பாரிசத்தில் ஊர். அதன் பக்கத்தில் தான், கிழக்கே பார்த்த சிவன் கோவிலில் தொடங்கி, பத்துப் பதினைந்து வீடுகள் உள்ள அக்ரகாரம். பிறகு ஊர்ப் பொட்டல். சற்று வட பாகமாகப் போகும் சந்து, பிள்ளைமார் சந்து. அதற்கப்புறம் மறவர்கள் தெரு. இவ்வளவையும் கடந்துவிட்டால் வேளாளர் தெருவின் தொடர்ச்சியான மறவர் தெருவின் கடைசிக்கு வந்து விட்டால். வயலும் குளமும், குளம் தடாகமன்று, வெறும் மண் கரையிட்ட ஏரி. சுற்றிலும் கண்ணுக் கெட்டியவரை கழனிகள். வான வளையத்தைத் தொடும் மூலையில் பச்சை மரங்கள். L வயல்களின் வழியாக இரண்டு மைல் நடந்தால் நதி, இரு கரையிலும் மருத மரமும் பனையும் கவிந்து நிற்கும். அதிலிருந்து தான் ஊரை யொட்டிப் பாயும் வாய்க்கால் புறப்படுகிறது. வேனிற் காலத்தில் குளத்திலும், வாய்க் காலிலும் ஜலம் வற்றிவிடும். அப்பொழுது விடியற் காலையில் ஸ்நானம் செய்வதை இன்பமாகக் கருதுவோர்கள் வாணிதாஸபுரத்திற்கு வந்தால் இரண்டு மைல் நடையைத் துச்சமாகக் கருதுவார்கள்.