உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மோட்சம்‌


ராமுவுக்கு எட்டு வயசுதான். ஆனால் வயசிற்குத் தகுந்த வளர்ச்சி இல்லை. கூழை, ஒல்லி, அடிக்கடி வியாதி. வீட்டுக்குச் செல்லப்பிள்ளை; அங்கே போகாதே, இங்கே போகாதே என்று கேட்டுக் கேட்டுக் கோழைப்பட்ட மனசு. 'அதைச் செய்யாதே' என்றால் கொன்றாலும் செய்யமாட்டான். அவ்வளவு மோசம்.

அம்மா வீட்டிற்கு விலக்கமாகிவிட்டால் அந்த ஐந்து நாளும் பள்ளிக்கூடத்தில் உதைதான். வீட்டில் கடைக்குப் போக வேண்டும்; அதை இதைச் செய்ய வேண்டும்; அப்பா சமையலுக்கு உட்கார்ந்து விட்டால், அவர் ஆபீஸுக்குப் போக வேண்டாமா? படிக்க, வீட்டுப் பாடம் எழுத நேரம் எங்கே இருக்கிறது? அப்பாவைப் பள்ளிக்கூடத்திற்கு வந்து சொல்லச் சொன்னால் நேரமாகிவிடுமாம். அவருக்கு எந்த வாத்தியார் இருக்கார்?

இன்றைக்கும் அப்படித்தான். பயம், போக வேண்டாம் என்று சொல்லுகிறது; அவனால் ஒளிந்து கொள்ள முடியவில்லையே!

'ஸார்' புஸ்தகத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கும்பொழுது மெதுவாகப் போய் உட்காருகிறான். அதற்குள் அந்தக் கழுகு தெரிந்து கொண்டுவிட்டது.

"டேய்! ராமசாமி, எத்தனை நாள் சொல்லுகிறது, லேட்டா வந்தா வெளியிலே நிற்க வேண்டும் என்று? என்னடா இன்னம் உட்கார்ந்திருக்கே? ஏறு பெஞ்சி மேலே. 'ஹோம் ஒர்க்' போட்டிருக்கையா?"

பதில் இல்லை.

"திருட்டு நாயே! அதுதான் ஒளியற ஜம்பமோ? வா இங்கே."

தயங்கித் தயங்கி நிற்கிறான்.

"வாடா என்றால்... திண்ணக்கத்தைப் பார்."

கையை எட்டிப் பிடித்துத் தரதரவென்று மேஜைப் பக்கம் இழுக்கிறார்.

"நீட்டு, கையை."


80

மோட்சம்