146
புது டயரி
மும் நன்றியுணர்வும் விளங்கும்படி செய்துவிட்ட மகிழ்ச்சியை அடைந்தேன்.
வேறு ஒரு கூட்டத்தில் பெரிய மாலை ஒன்றைப் போட்டார்கள். கூட்டம் முடிந்து வரும்போது அந்த மாலையைக் கையில் எடுத்துக் கொண்டேன். அருகில் நின்ற என் அன்பர் சட்டென்று கை நீட்டி அதை வாங்கிக் கொண்டார். “நான் பூபாரம் தாங்க மாட்டேனென்று வாங்கிக் கொள்கிறீர்களா?” என்று சொல்லிப் புன்முறுவல் பூத்தேன்.
என்னுடைய மணி விழாவில் இலங்கையிலிருந்து வந்த இராசேந்திர குருக்கள் என்ற அன்பர் மிகப் பெரிய மாலைகளாக வாங்கி எனக்கும் என் மனைவிக்கும் அணிவித்தார். அவருக்கு அப்படி ஓர் ஆசை. எத்தனை பெரிய மாலையாக இருந்தால் என்ன? இரண்டு நாளுக்குமேல் இருக்குமா?
அந்த அன்பர் மற்றொரு காரியமும் செய்தார். எங்களுக்கு மாலைகளை அணிவித்தவுடன் அந்தக் கோலத்தில் ஒரு போட்டோவை எடுக்கச் செய்தார். அதில் ஒரு பிரதி எனக்குக் கொடுத்து என் வீட்டில் மாட்டும்படி என் பிள்ளைகளிடம் சொன்னார். அவர் ஒரு பிரதியைக் கொண்டு சென்று யாழ்ப்பாணத்தில் நீர்வேலியில் உள்ள தம் இல்லத்தில் மாட்டி வைத்திருக்கிறார்.
அவர் போட்ட மாலை இரண்டு நாளுக்கு மேல் இல்லை. ஆனால் அந்த மாலையின் வடிவம் இன்னும் போட்டோவில் அவர் அன்பைக் காட்டிக் கொண்டு விளங்குகிறது.