பூங்கோதை
1
சேலம் ஜில்லாவில் சங்ககிரி துர்க்கம் என்ற ஊர் ஒன்று இருக்கிறது. அங்கே பிறந்தவர் எம் பெருமான் கவிராயர் என்பவர். அவர் ஆயர் குலத்தில் உதித்தவர். இளமைக் காலத்தில் அவர் தமிழ் நாடு முழுவதும் பிரயாணம் செய்து பாண்டி நாட்டில் சில காலம் தங்கிச் சில வித்துவான்களை அடுத்துத் தமிழ் பயின்றார். பிறகு கொங்கு நாட்டிலுள்ள தம் ஊருக்குப் போய்த் தமிழ் நூல்களை ஆராய்ந்தும் பாடம் சொல்லியும் இன்புற்றுவந்தனர். அவருக்குக் கம்ப ராமாயணத்தில் பேரன்பு இருந்தது. அந்த நூலை அடிக்கடி படித்தும், அந்நூலின் நயங்களைப் பிறருக்குச் சொல்லி இன்புற்றும் பொழுது போக்கிவந்த அவர்பால் யாவருக்கும் நன்மதிப்பு உண்டாகி வளர்ந்து வந்தது. ராமாயணத்தில் ஊறிய அவருடைய வாக்கில் வரும் விஷயங்கள் பக்திச் சுவை ததும்ப இருத்தலை யாவரும் அறிந்து பாராட்டினர்.
கொங்கு நாட்டில் மோரூர் என்னும் ஊரில் அதைச் சூழ்ந்துள்ள கீழ்கரைப் பூந்துறைநாடு என்னும் பகுதிக்குத் தலைவனாக நல்லதம்பிக் காங்கேயன் என்னும் உபகாரி வாழ்ந்து வந்தான் (பதினாறாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி). அவன் தமிழன்பு மிகுந்தவன். தமிழ்ப் புலவர்களை ஆதரிக்கும் இயல்புடையவன். எம்பெருமான் கவிராயருக்கும் நல்லதம்பிக் காங்கேய-