பக்கம்:புது மெருகு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முற்றுகை

21

பாருங்கள்" என்று சொல்லி வழுதி அந்த ஏட்டைப் படைத்தலைவருள் முதல்வனிடம் அளித்தான்.

தலைவன் வாசித்தான்; உண்மையை உணர்ந்தான். பறம்பு மலையின் இயற்கை வளம் இந்த முற்றுகையை எதிர்த்து நிற்கும் வலியைப் பாரிக்கு அளித்திருக்கிறது என்ற கருத்தை அந்தப் பாட்டு வெளியாக்கிற்று.

"நீங்கள் மூன்று பேரும் ஒருகாலும் சேராதவர்கள். இப்போது சேர்ந்து வந்திருக்கிறீர்கள். எல்லோருடைய முரசும் சேர்ந்து முழக்கும் முழக்கம் எங்கள் காதைச் செவிடுபடச் செய்கிறது. ஆனாலும் என்ன பிரயோசனம்? பாரியின் பறம்பு மலை அவ்வளவு சுலபமாக வசப்படுவதல்ல! இதைப் பார்க்கும்போது இரக்கந்தான் உண்டாகிறது.

"நீங்கள் பல காலம் முற்றுகையிட்டால் உணவுப் பொருள் கிடைக்க வழியில்லாமல் நாங்கள் மாண்டு மடிவோம் என்று நினைக்கிறீர்கள். எங்கள் பறம்பு மலை அவ்வளவு வறியது அன்று. மண்ணை உழுது விளைவிக்கும் உணவுப் பொருள்களால்தான் நாங்கள் உயிர் பிழைக்கவேண்டும் என்ற அவசியமே இல்லை. காலைமுதல் மாலை வரையில் உழைத்து உழுது பயிரிடும் சிரமம் இல்லாமலே எங்களுக்குப் பறம்பு மலை நான்கு உணவுப் பொருள்களைத் தருகின்றது. எங்கும் அடர்ந்து வளர்ந்துள்ள மூங்கிலிலே நெல் விளைகின்றது. அதைக் கொண்டு நாங்கள் சோறு சமைத்துக்கொள்ளலாம். பலாமரங்களில் இனிய சுளைகளோடு கூடிய பழங்கள் கனிந்து உதிர்கின்றன. அவற்றை நாங்கள் உணவுக்கு வியஞ்சனமாகக் கொள்வோம். தளதள வென்று படர்ந்திருக்கும் வள்ளிக்கொடி கணக்கில்லாமல் உள்ளது. அதன் கிழங்கு வேறு இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/26&oldid=1548621" இலிருந்து மீள்விக்கப்பட்டது