யமன் வாயில் மண்
1
காலத்தின் கோலத்தால் சோழநாடு இரண்டு பிரிவு பட்டு இரண்டு அரசர்களின் ஆட்சிக்கு உட்பட்டது. நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என்னும் இருவரும் சோழ குலத்தினரே. இருவரும் தனித்தனியே ஒவ்வொரு பகுதியை ஆண்டுவந்தனர். அவ்விருவருக்கும் இடையே இருந்த பகைமை மிகக் கடுமையானது. கடுமை, கொடுங்கடுமை மிகக் கொடுங்கடுமை என்று அந்தப் பகைமையின் உரத்தை எப்படிச் சொன்னாலும் பற்றாது. இருவரும் வீரத்திலும் கொடையிலும் ஒத்தவர்கள்; புலவர்களைப் போற்றுபவர்கள். ஆயினும் அவ்விருவரும் ஒன்றவில்லை.
இந்தப் பகைநிலைக்கிடையே துன்புற்றவர்கள் குடிமக்களே. சோழநாடு மிகப் பழங்காலமுதல் பிரிவின்றிச் சிறந்திருந்தது. நாடு முழுவதும் உடல் போலவும் அதனைத் தனியாளும் அரசன் உயிர்போலவும் இருப்பதாகக் கவிஞர் வருணிப்பது வழக்கம். இப்பொழுதோ அந்த உடல் இரண்டு துண்டுபட்டுக் கிடக்கின்றது. ஒரு பகுதியில் உள்ள குடிகள் மற்றொரு பகுதியிலுள்ளா ரோடு கலந்து பழக வழியில்லை. அது பகைவன் நாடு என்ற ஒரு பெருந்தடை. அவர்களிடையே நெடுங்காலமாக இருந்த உறவையும் நட்பையும் வியாபாரம் முதலியவற்றையும் அறுத்துவிட்டது. மகளைக் கொடுத்த தந்தை நலங்கிள்ளியின் ஆட்சியின் கீழ் இருப்-