32
புது மெருகு
பான்; மகளும் மருமகனும் நெடுங்கிள்ளியின் குடிமக்களாக இருப்பார்கள். இருசாராரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் பழக வாய்ப்பில்லை.
என்ன செய்வது! அரசர்களுக்குள் உண்டாகிய பகைமை நாடு முழுவதும் துன்புற ஏதுவாகியது. 'இதைக்காட்டிலும் அரசன் இல்லாத நாடு சிறந்ததாகஇருக்குமே. நினைத்தபடி நினைத்த இடத்துக்குப் போகலாம், வரலாம், திரியலாம்' என்று எண்ணி வருந்தினர் சிலர்.
தமிழ்நாட்டில் புலவர்களுக்கு இருந்த நன்மதிப்பை என்னவென்று சொல்வது! சாதாரண ஜனங்களுக்கு இல்லாத பெருமையும் உரிமையும் அவர்களுக்கு இருந்தன. ஒருவருக்கொருவர் பகைமை சாதிக்கும் இரு பெருவேந்தரிடத்தும் சென்று பரிசு பெறும் உரிமையை அவர்கள் படைத்திருந்தார்கள். இன்று ஒரு புலவர் மதுரையிலே பாண்டியன் அவைக்களத்தில் தம்முடைய நாவன்மையைப் புலப்படுத்திப் பரிசு பெறுவார். நாளை அவரே பாண்டியனுக்குப் பரம விரோதியாகிய சோழன்பால் சென்று அவனையும் பாடிப் பரிசு பெறுவார். அவர்களுக்கு எங்கும் அடையா நெடுங்கதவுதான்.
இளந்தத்தன் என்னும் புலவன் இளம் பருவத்தை யுடையவன்; கற்பன கற்றுக் கேட்பன கேட்டு இப்பொழுதான் உலக அரங்கத்தில் உலவக் கால் வைத்திருக்கிறான். அவனைப் பலர் அறியார். இனி மேல்தான் அவன் தன் புலமையைத் தமிழ்நாட்டில் நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும். தகுதியறிந்து பரிசளிக்கும் வள்ளல் யாரென்று ஆராய்ந்தறிந்த அப்புலவன் சோழன் நலங்கிள்ளியின் அரசவையை அணு-