பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29. பெளத்த தருமம் (ஒரு தாய் கருவுற்று, ஒன்பது அல்லது பத்து மாதங்கள் வரை கவலையோடு பேணிவந்து, பின்னர் குழந்தை பிறப்பதையும், அது வளர்ந்து பாலப் பருவம் அடைந்து, பொம்மைகள், கழிகள், வண்டிகள் முதலியவற்றைக் கொண்டு விளையாடி வருவதையும், நாளடைவில் அது வலுவடைந்து புலன் உணர்ச்சிகளிலும் அறிவிலும் தேர்ந்து வளர்ச்சியடைவதையும் புத்தர் பெருமான் விவரித்துவிட்டு, மனிதன் பாசவலையில் வீழ்வதையும், விடுதலை பெறுவதையும் பற்றிக் கூறியுள்ளது. ) பின்னர் குழந்தை வளர்ச்சியடைந்து, கண், காது. நாசி, நா. உடல் முதலியவற்றின் தீண்டுகையால் ஏற்படும் ஐந்துவகைப் புலன் இன்பங்களோடும், முதிர்ந்துவரும் அறிவு ஆற்றல்களோடும், அலைந்து திரிகின்றது: பொருள்கள் யாவும் விருப்பத்தைத்துண்டியும், மயக்கியும், இன்பமளித்தும், அருமையாயும், புலன்களின் இன்பத்திற்கு உகந்தவைகளாயும் விளங்குகின்றன. கண்ணால் ஒர் உருவத்தைக் கொண்டு, மயக்குகின்ற உருவங்களிலே அவன் ஆசை கொள்கிறான், வெறுப்பான உருவங்களை விலக்குகிறான், சிந்தனை சிறிதுமின்றிக் கருத்தில்லாமல் அவன் வாழ்கிறான். துக்ககரமான பயனற்ற அந்தப் பொருள்கள் யாவும் மிச்சமின்றி முழுதும் தீர்ந்துபோகக்கூடிய (பரிபாக நிலையான) மனத்தின் விடுதலையை, ஞானத்தினால் கிடைக்கும் விடுதலையை, அவன் அறிவதில்லை. இவ்வாறு அவன் திருப்தி, அதிருப்தி ஆகியவற்றைப்பற்றித் தெரிந்து கொள்கிறான்; அவன் எந்த உணர்ச்சியை உணர்ந்தாலும், அது இன்பகரமானதோ, துன்பகரமானதோ, அல்லது இரண்டுமற்றதோ எதுவாயிருந்தாலும் அதை வரவேற்கிறான், ஏற்றுக்கொள்கிறான். அதை விடாமல் பற்றிக்கொள்கிறான். இதிலிருந்துதான் மயக்கம் எழுகின்றது. உணர்ச்சிகளில் மயங்குதல் அவைகளைப் பற்றிக் கொள்வதாகும். பற்றிலிருந்து பவம் (அடுத்த பிறப்புக்குக் காரணமான கருமத்தொகுதி) தோன்றுகின்றது. பவத்திலிருந்து பிறப்பு (தோற்றம்) ஏற்படுகின்றது. பிறப்பினால் தளர்ச்சி - மரணம், சோகம், துக்கம், துயரம், அரற்றல், கையற்ற நிலை ஆகிய வினைப்பயன்கள் தோன்றுகின்றன.துக்கம் அனைத்தும் தோன்றுவது இவ்வாறுதான். (கண்ணைப் போலவே) காது, நாசி, நா ஆகிய புலன் உணர்ச்சிகளும், உடலின் தீண்டுகையால் வரும் உணர்ச்சிகளும், மனத்தால் வரும் உணர்ச்சிகளும், இவற்றால் அவன் விருப்பத்தையும் வெறுப்பையும் பெற்று. (முன்கூறியதுபோல்) விடுதலையைப் பற்றி அறியாமல் வாழ்கிறான். ' A. A. ப. ராமஸ்வாமி 59