பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 123

அவசியம் பார்க்கவேண்டுமென்று கூறினார். ஆனந்தர் மீண்டும் மறுத்தார். இதையறிந்த பகவன் புத்தர், சுபத்தரை உள்ளே அனுப்பும்படி ஆளந்தருக்குக் கூறினார். ஆனந்தர் அவரை உள்ே அனுப்பினார்.

சுபத்தர், பகவரிடம் சென்று வணங்கி அவருக்கு ஆயாசமுண்டாக்க விரும்பாமல் தமக்குப் பௌத்தக் கொள்கையைப் போதிக்கும்படி வேண்டினார். பகவர், நான்கு வாய்மைகளையும் எட்டு மார்க்கங்களையும் தெளிவாகவும் விளக்கமாகவும் உபதேசம் செய்தார். இதைக்கேட்ட சுபத்தர் போதி ஞானம் பெற்று புத்ததர்ம சங்கத்திடம் அடைக்கலம் புகுந்தார். பிறகு, தன்னைப் பௌத்த சங்கத்தில் சேர்க்கும்படி கேட்டுக் கொண்டார். பகவன் புத்தர் அவரைப் பிக்குவாக்கிச் சங்கத்தில் சேர்ப்பித்தார். பகவன் புத்தரால் கடைசியாகப் பெளத்த மதத்தில் சேர்க்கப்பட்டவர் இந்தச் சுபத்தரே.

பிக்குகளுக்குப் போதனை

அதன் பிறகு பகவன் புத்தர், ஆனந்தமகா தேரரை அழைத்து இவ்வாறு அருளிச் செய்தார். "ததாகதர் நிர்வாணம் பெற்ற பிறகு சங்கத்தாரில் யாரேனும் 'பகவர் நிர்வாணம் அடைந்தார். இப்போது நமக்குக் குருநாதன் இல்லை' என்று நினைக்கக் கூடும். அப்படி நினைப்பது தவறு. ஆனந்த! ததாகதரின் போதனைகள் சங்கத்தின் குருநாதனாக இருக்கும். போதனைகளைச் சரிவர அறிந்து ஒழுகுங்கள்” என்று அருளினார்.

பிறகு பகவன் புத்தர் பிக்குகளை விளித்து. "ததாகதரைப் பற்றியும் அவருடைய போதனையைப் பற்றியும் சங்கத்தைப் பற்றியும் உங்களில் யாருக்கேனும் சந்தேகங்கள் இருக்கக்கூடும். ஏதேனும் இருந்தால் இப்போதே கேளுங்கள். உங்கள் ஐயங்களை விளக்குவேன். இப்பொழுது கேட்காவிட்டால் பிற்காலத்தில், 'ததாகதர் இருந்த காலத்தில் எங்கள் சந்தேகங்களைக் கேட்டு விளக்கம் தெரிந்து கொள்ளவில்லையே?' என்று பின்னால் வருந்தாதீர்கள்" என்று அருளிச் செய்தார்.

அப்போது பிக்குகள் எல்லோரும் ஒன்றும் கேட்காமல் மெளனமாக இருந்தார்கள். பகவன் புத்தர் மறுபடியும், ஐயமுள்ளவர்கள் சந்தேகம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்று கூறினார். அப்பொழுதும் பிக்குகள் மௌனமாக இருந்தார்கள். மூன்றாந்தடவையும் பகவர், ஐயங்களைக் கூறும்படி கேட்டார். அப்பொழுதும் அவர்கள் வாளா இருந்தார்கள்.