பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இணைப்பு - 3

புத்தர் பொன்மொழிகள்

பாவஞ்செய்தவன் இம்மையிலும் துக்கமடைகிறான், மறுமையிலும் துக்கமடைகிறான். அவன் இரண்டிடங்களிலும் துக்கமடைகிறான். தான் செய்த தீய செயல்களைக் கண்டு விசனம் அடைந்து அழிந்து போகிறான்.

புண்ணியம் செய்தவன் இம்மையிலும் மகிழ்ச்சியடைகிறான், மறுமையிலும் மகிழ்ச்சியடைகிறான். அவன் இரண்டிடங்களிலும் மகிழ்ச்சியடைகிறான். தான் செய்த நல்ல செயல்களைக் கண்டு மனம் மகிழ்ந்து மேன்மேலும் இன்பம் அடைகிறான்.

ஒருவர் தாம் உபதேசிப்பதுபோல செய்கையில் நடக்காமல் இருந்தால், அவருடைய உபதேசங்கள், மணம் இல்லாத பூவைப்போல பயனற்றவை ஆகும்.

ஒருவர் தாம் உபதேசிப்பதுபோலவே செயலிலும், செய்வாரானால், அவருடைய போதனைகள், மிக அழகான பூவுக்கு நறுமணம் அமைந்திருப்பதுபோல, மிக்க பயனுடையவை ஆகும்.

மூடர்கள் அறிஞருடன் தமது வாழ்நாள் முழுவதும் பழகினாலும், அகப்பை குழம்பின் சுவையை அறியாதது போல, அவர்கள் அறநெறியை அறிகிறதில்லை.

அறிவுள்ளவர்கள் அறிஞருடன் சிறிதுநேரம் பழகினாலும், நாவானது குழம்பின் சுவையை அறிவதுபோல, அவர்கள் நன்னெறியை அறிந்து கொள்கிறார்கள்.

குற்றங்களைச் சுட்டிக்காட்டிக் கண்டிக்கிற ஒருவரைக் கண்டால், செல்வப்புதையல் இருக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டுகிறவர் எனக்கருதி, அவரோடு நட்புக்கொண்டு பழகவேண்டும். அப்படிப்பட்டவரை நண்பராகக்கொண்டு அவருடன் பழகுவது நன்மை பயக்குமேயன்றி தீமை பயக்காது.