பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 61

பூமண்டலம் போதிசத்துவருக்கு அமைந்த ஒரு இல்லம்போலத் தோன்றியது. அடிமுதல் நுனிவரையில் நூறுமுழம் உயர்ந்து வளர்ந்த அந்த அரசமரமானது மயில் ஒன்று தன் தோகையை விரித்திருப்பது போன்று காணப்பட்டது. இந்தப் போதி மரத்தின் அடியிலே அமர்ந்து வசவர்த்தி மாரனை (தேவபுத்திரமாரனை) வென்ற போதிசத்துவர் கிலேசமாரன், மிருத்யுமாரன், ஸ்கந்தமாரன், அபிசம்ஸ்காரமாரன் என்னும் மற்ற மாரர்களையும் வெற்றி கொள்வதற்கு ஆயத்தமாக இருந்தார். அவரிடம் வந்த தேவர்களும் பிரமர்களும் அவரை வணங்கி வாழ்த்திப் போற்றிப் பிறகு தத்தம் இருப்பிடம் சென்றார்கள்.

போதிஞானம் அடைதல்

வைசாகப் பௌர்ணமியாகிய அன்று மாலை வசவர்த்திமாரனை வென்ற போதிசத்துவர், அவ்விரவின் முதல் யாமத்திலே யோகத்தில் அமர்ந்து படிப்படியாக முதலாவது, இரண்டாவது மூன்றாவது, நான்காவது என்னும் யோகங்களைச் செய்து நாலாவது யோகத்திலிருந்து மனத்தைச் செலுத்தித் தமது முன் பிறப்புக்களைக் காணத் தொடங்கினார். இவ்வாறு முற்பிறப்புக்களைக் காணும் இவருக்கு, முன்பு உண்டாகியிருந்த கணக்கற்ற பிறப்புக்கள் புலனாயின. இந்த முதல் யாமத்திலே யோகத்தை (அறியாமையை) நீக்கி முற்பிறவியைக் காண்கிற ஞானத்தையடைந்தார். இந்த ஞானத்திற்கு 'முதல் சித்தி வாபம்' என்பது பெயர்.

முதல் சித்திலாபம் என்னும் இந்த ஞானத்தின் மூலமாகத் தமது முற்பிறப்புக்களைக் கண்ட போதிசத்துவர், "நாமரூபங்கள் (உயிருடன் கூடிய உடம்பு) அந்தந்தப் பிறப்பிலே உண்டாகி அந்தந்தப் பிறப்பிலேயே அழிந்துவிட்டன. நாமரூமங்கள் தோன்றியபோது ஐம்பொறிகளும் ஐம்புலன்களும் தோன்றி அவையும் அந்தந்தப் பிறப்பிலேயே மறைந்துவிட்டன. ஆனால், தனிப்பட்டதும் அழியாததும் ஆன உயிராவது, ஜீவனாவது, புருஷனாவது கிடையாது. ஆகையினாலே, இவைகளை உண்டாக்கிய கடவுளாவது பிரமனாவது மாரனாவது கிடையாது" என்று அறிந்து இருபது விதமான சத்காய திருஷ்டியை (ஆத்ம திருஷ்டியை) நீக்கினார். இதுவே போதிசத்துவருக்குக் கிடைத்த முதல் விசுத்தியாகும்.

பிறகு போதிசத்துவர் அவ்விரவின் இடையாமத்திலே முன்போலவே யோகத்தில் அமர்ந்து அதன்மூலமாக நான்கு தியானங்களை அடைந்து நான்காவது தியானத்துக்கப்பால் தமது மனத்தைச் செலுத்தி ஜனங்களுடைய பிறப்பு இறப்புக்களைக்