பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60 / புத்தரின் வரலாறு

"பத்துப் பாரமிக[1] தர்மங்களை நிறைவேற்றினவன் ஆகையினாலே உன்னிடத்தில் எனக்கு அச்சம் இல்லை" என்று கூறினார் போதி சத்துவர்.

"நீர் பாரமிக புண்ணியங்களை நிறைவேற்றினது யாருக்குத் தெரியும்? அதற்குச் சான்று உண்டா?" என்று கேட்டான் மாரன்.

போதிசத்துவர், "மாரனே! நான் சான்று காட்ட வேண்டியதில்லை. ஆனாலும் நீ கேட்கிறபடியினாலே சான்று காட்டுவேன்."

ஒரு வெஸ்ஸந்தர ஜன்மத்திலே நான் தானங்கொடுத்தபோது ஏழு தடவை பூமி அதிர்ச்சிகொண்டது உண்மை என்பதை இந்தப் பூமிதேவி சான்று கூறுவாள்" என்று கூறி சீவரத்தின்உள்ளே இருந்த தமது கையை வெளியில் எடுத்துப் பூமியைச் சுட்டிக்காட்டினார்.

அப்போது பூமியானது பயங்கரமான ஓசையுடன் ஆறு தடவை அதிர்ந்தது. இதைக்கண்டுங் கேட்டும் அச்சங்கொண்ட மாரன் தன்னுடைய கொடியை எடுத்துக் கொண்டு சேனையுடன் ஓடிப்போனான். இவ்வாறு சூரியன் மறையு முன்பே போதிசத்துவர் மாரனை வென்று வெற்றி பெற்றார். இந்தப்போரை வெகு தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த பிரமர்களும் தேவர்களும் போதிசத்துவர் வெற்றி பெற்றதைக்கண்டு, "துக்கமற்ற புண்ணியவான்களே! சித்தார்த்த போதிசத்துவருக்கு வெற்றி கிடைத்தது? வசவர்த்திமாரன் தோல்வியடைந்தான். ஆகையினாலே, ஜய மங்கள விழாவையும், புத்த மங்கல விழாவையும் ஒருங்கே கொண்டாடுவோம் வாருங்கள்'" என்று சொல்லிக்கொண்டே எல்லோரும்போதி மரத்தண்டை வந்தார்கள்.

அப்போது ஆயிரம் கதிர்களையுடைய பொன்தட்டு ஒன்று தண்ணீரில் அமிழ்வதுபோல சூரியன் மேல்கடலில் மூழ்கினான். முழுநிலா பால்போன்ற ஒளியை எங்கும் வீசிக்கொண்டு ஆகாயத்திலே காணப்பட்டது. தூய்மையான வானத்திலே விண்மீன்கள் மின்னிக் கொண்டிருந்தன. இந்தக்காட்சி போதுசத்துவருக்கு அமைக்கப்பட்ட விதானம்போலத் தோன்றியது. வானமும் பூமியும் சேர்வதுபோல் காணப்படும் வானவட்டமானது போதிசத்துவரைச் சூழ்ந்திருக்கும் பிரகாரம் போன்று காணப்பட்டது.


  1. பத்துப் பாரமிதைகளாவன: 1. தானம். 2. சீலம் (ஒழுக்கம்) 3. நெக்கம்மம் (ஆசைளை அகற்றிப்பிறர் நலத்துக்காக வாழ்தல்) 4. பஞ்ஞா (ஞானம்) 5. வீரியம் (ஆற்றல்) 6.கந்தி (பொறுமை) 7. வாய்மை (சத்தியம்) 8. அதிட்டானம் (ஒழுக்கம் நேர்மை இவற்றிலிருந்து பிறழாமல் இருத்தல்) 9. மேத்தை (அன்பும் அருளும் உடைமை) 10.உபேக்ஷை (விருப்பு வெறுப்பு இல்லாதிருத்தல்)