பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

கடைசியில் இந்தக் குருடனுக்கு அரண்மனைத் தாசி ஒருத்தி என்னைப் பற்றி அறிவுறுத்தினாளாம். தனக்கு என்று ஒரு மனைவி இருந்தது பிறகுதான் இவனுக்குத் தெரிந்ததாம்.

பிறகு நானும் குழந்தைகளைப் பெறத் தொடங்கினேன், ஒன்றுக்குப் பின் ஒன்றாக! அதே காலகட்டத்தில் அரண்மனைத் தாசிகளும் இந்தக் குருடனைக் கூடிக் குழந்தைகளைப் பெற்றார்களாம்; எல்லாம் சேர்ந்து நூறு குழந்தைகள் என்கிறார்கள், யார் கண்டார்கள் இந்தப் பன்றிக்குட்டிகளின் கணக்கை?

ஆனால் என் உதிரத்தில் உதித்த குழந்தைகள் மட்டும் பதினான்கு. அதன் பின் ஒரே ஒரு பெண் குழந்தை !

கன்னட பாரதக் கதை இவ்வாறிருக்கத் தமிழ் பாரதக் கதையில் கனவில் கூடக் கருதமுடியாத- நம்ப முடியாத, 'மண்தொட்டிகள் உதிரத்தைக் குழந்தைகளாக்கிச் சரியாக ஒரு நூறு பேர்களை வெளிப்படுத்திற்று' என்று உள்ளம் உறுத்த அறிவு அருவறுக்க எழுதி ஏமாற்றியதேன்? வேத வியாசனது தெய்விகப் பேராற்றலை ஒன்றுக்குப்பத்தாக்கி வெளிச்சம் போட்டுக் காட்டத்தானே? இத்தகைய பெரிய பெரிய பொய்கள் பொருத்திப் புகலும் மகா பாரதக்கதை புகாத இந்து மதத்தினர் வீடு ஒன்றுண்டோ ? அறிஞர் ஆராய வேண்டாமா? சிந்தனையாளர், புலவர் பெருமக்கள், எழுத்தாளர் இதனை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

'முக்கியத்துவம் உண்மைக்கு மட்டும் உரியது; பொய்மைக்கன்று' என்பது எல்லா மக்களுக்கும், எல்லா நாட்டினருக்கும் பொதுவான அறமல்லவா?

'சைத்தான் அரசாள ஆரம்பித்தால் சத்தியம் தங்குமிடம் காணாது தடுமாறித் தீரும் என்பது தமிழ் வல்லுனர் அறியாத ஒன்றல்லவே!

'தத்யத்-தத்-சத்ய-தஸௌ ன ஸதித்யே,'அந்தச் சத்தியம் எதுவோ அதுதான் இந்த ஆதித்யன் (சூரியன்) என்கிறது பிரு. உபநிசத்து.