அண்ணாதுரை
59
மீண்டும் 'பித்தா பிறைசூடி' என்ற பாடலையே பரப்பிக் கொண்டு போவோமேயானால் பித்தம் தெளிய மருந்தே கிடைக்காமற் போய்விடும்.
இன்று மக்கள் ஆரியத்தில் ஆழ்ந்து கிடக்கின்றனர். சைவர்கள் தமிழை, தமிழ் வாழ்வைப் போற்றுபவர் என்று பெருமையுடன் கூறிக் கொள்வதைக் கேட்டுள்ளோம். அவர்கள் ஆரியத்தை அகற்ற என் செய்தனர்? என் செய்ய எண்ணுகின்றனர்? மீண்டும் அந்த "மண் சுமந்த படலத்துக்கு" மதிப்புரை எழுதிக் கொண்டிருக்கத்தான் போகிறார்களா? மடாதிபதிகள் இதனைத்தான் "புலவர் பணி" எனக் கொள்ளப் போகின்றனரா என்று கேட்கிறோம்.
ஒன்று கூறுகிறோம்
மடாதிபதிகளுக்கு ஒன்று கூற விரும்புகிறோம். மக்களின் கண்கள் திறந்திருக்கும் இந்த வேளையில் நீவிர் அவர்தம் மனம் உம்பால் அன்பினால் இழுக்கப்படும் விதத்தில் நடத்தலே முறையாகும். ஜெமீன்தார் ஒழிப்பு மசோதா, கடன் ஒழிப்பு மசோதா பால்ய விவாக ஒழிப்பு மசோதா, எனச் சட்டங்கள் வரும் காலத்தில் மட ஒழிப்பு மசோதா வரவே வராது என யாரால் உறுதி கூறமுடியும்? மடாதிபதிகள் மக்களின் அதிபர்களாகி, பணியாற்றினால்தான் தப்பமுடியும். இன்றேல் கவி கற்பனையில் கூறியபடி, "மடத்தின் ஆஸ்தியெல்லாம்-பொதுவில் மக்களுக்காக்கி விட்டேன்" எனச் சட்டம் கூறும்!
"எப்படி நான் பிரிவேன்—அடடா இன்பப் பொருளையெல்லாம்" என்று தம்பிரான் துள்ளி விழுந்தழுதாலும் மக்கள் "ஓப்பி உழைத்ததில்லை-சிறிதும் உடல் அசைந்ததில்லை" என்று கூறுவர்!
பல மடாதிபதிகள் பலப்பல இலட்சங்கள் தந்து அத்தொகை வெறும் புராணீகர்களுக்குப் போய்ச்