288
புறநானூறு செய்யுளும் செய்திகளும்
274. உலோச்சனார்
நீல நிறத்துக் கச்சும், பூத்தொழில் செய்யப்பட்ட ஆடையும் உடுத்தி மயிற் பீலியைக் கண்ணியாகச் சூடியுள்ள பெருந்தகை மறவன் தன்னையே நோக்கி வரும் யானைமீது வேலினைப் பாய்ச்சிப் பின் தன்னையே இழப்பான்போல் தோன்றுகிறது.
வேல் தாங்கிய வீரர் குதிரை மீது வருகிறவர் இவனைச் சென்று அணுக இவன் அவர்களைக் கையால் தழுவிக் கீழே தள்ளி அவர்களோடு மோதி அவர்கள் உடம்பை மேலே தூக்கி எறியப் பற்றினான். இவன் மறம் வியத்தற்கு உரியது.
நீலக் கச்சைப் பூ ஆர் ஆடைப், பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன் மேல் வருங் களிற்றொடு வேல் துரந்து, இனியே, தன்னும் தூக்குவன் போலும் - ஒன்னலர் எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தரக், கையின் வாங்கித் தழிஇ, மொய்ம்பின் ஊக்கி, மெய்க் கொண்டனனே!
திணையும் துறையும் அவை.
உலோச்சனார் பாடியது.
275. ஒரு உத்தனார்
வளைவுமிக்க மாலையைத் தலையில் அணிந்துள்ளான். வளைந்து திரைத்த ஆடையை உடுத்தி உள்ளான். வேந்தன் கருதியது அறிந்து செயல்படும் சிந்தையன். எதிரியின் முன்னணிப் படையைப் பிளந்து கொண்டு முன் செல்கிறான். மற்றவர்கள் அவனைத் தடுக்க முயன்றும் அவன் அவர்களை மீறிக் கொண்டு உள்ளே பாய்கின்றான். வேலை முகத்தில் தூக்கிப் பிடித்துக் கொண்டு தனியே உள்ளே புகுகின்றான்.
வீரர்கள் பலர் செல்லற்க எனக் கூறித் தடுத்தபோதும், இறந்துபடுபவரின் குடல்கள் காலில் தடுத்து நிறுத்தவும். கன்றைக் காக்கும் பசுவைப் போல் ஆவேசத்தோடு போர்க்களத்தில் அகப்பட்ட தன் தோழனைக் காக்கச் செல்கிறான்.