பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

95



63. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்

அம்புபட்ட யானைகள் அனைத்தும் வினையின்றிக் களத்தில் பட்டு இறந்துவிட்டன. வீரர்களோடு குதிரைகள் சேர்ந்து இறந்துவிட்டன. தேரில் செல்லும் வீரர்கள் எல்லாம் தம் கண்களைத் தாம் பிடித்த பரிசைகள் மறைக்க ஒருங்கு மாய்ந்தனர். முரசங்களும் அவற்றை எடுத்து அடிப்பார் இல்லாமையால் பழுதுபட்டுப் பாழாகிவிட்டன. வேல்கள் மார்பில் பாய்ந்ததால் வேந்தர்கள் இருவரும் களத்தில் இறந்துபட்டனர். இனி இவர்கள் நாடு என்ன ஆகும்? எவ்வாறு துளிர்க்கும்?

வயல்களில் ஆம்பல் தண்டினை வளையல்களாக அணிந்த மகளிர் பச்சை அவல் அரிசியை வாயில் இட்டு முக்கியவராய்த் தண்புனலில் பாய்ந்து விளையாடுவர். புதிய விளைச்சல்கள் தொடர்ந்து வருவாய் உடைய வயல்கள் மிக்க நாடுகள் அவர்களுடையவை. அவற்றைக் காப்பார் இல்லாமையால் அழிவுபடுவது உறுதி; அவர்கள் நாடுகள் சீர்கெட்டு அழியும்.

எனைப் பல் யானையும் அம்பொடு துளங்கி, விளைக்கும் வினை இன்றிப் படை ஒழிந்தனவே; விறற் புகழ் மாண்ட புரவி எல்லாம் மறத் தகை மைந்தரொடு ஆண்டுப் பட்டனவே! தேர் தர வந்த சான்றோர் எல்லாம், தோல் கண் மறைப்ப, ஒருங்கு மாய்ந்தனரே விசித்து வினை மாண்ட மயிர்க் கண் முரசம், பொறுக்குநர் இன்மையின், இருந்து விளிந்தனவே; சாந்து அமை மார்பில் நெடு வேல் பாய்ந்தென. வேந்தரும் பொருது, களத்து ஒழிந்தனர்; இனியே, என் ஆவதுகொல்தானே-கழனி ஆம்பல் வள்ளித் தொடிக் கை மகளிர் பாசவல் முக்கித் தண் புனல் பாயும், யாணர் அறாஅ வைப்பின் காமர் கிடக்கை அவர் அகன் தலை நாடே?

திணையும் துறையும் அவை, அவரை அக் களத்தில் பரணர் பாடியது.