உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

புல்லின் இதழ்கள்

“புறப்படலாமா?” என்று கேட்ட வண்ணம் காரியதரிசி பாபு உள்ளே நுழைந்தார்.

“வாங்கோ, வாங்கோ” என்று அவரை உற்சாகமாக வரவேற்ற பாகவதர், “இதற்காகவா நீங்கள் இவ்வளவு தூரம் வந்தீர்கள்? இதோ இவர்கள் எல்லாரும் கிளம்பிக் கொண்டே இருக்கிறார்கள்” என்றார்.

“அதற்கில்லை அண்ணா. பிடில், மிருதங்கம் எல்லாம் வந்தாயிற்று. பந்தலில் இப்போதிருந்தே கூட்டம் தாங்கவில்லை; பஜனை மடத்தைச் சுற்றிலும் வேறு ஏகப்பட்ட ஜனங்கள். சரியாக எட்டு மணிக்கெல்லாம் ஆரம்பித்தால்தான், தாக்குப் பிடிக்க முடியும்” என்றார்.

“அதற்கென்ன? அப்படியே ஆரம்பித்தால் போகிறது. கொஞ்சமா விளம்பரம் செய்திருக்கிறீர்கள்? கூட்டத்துக்குக் கேட்பானேன்?”

“அதெல்லாம் ஒன்றும் இல்லை அண்ணா. விளம்பரம் செய்தால் மட்டும், ஜனங்கள் வந்து விடுகிறார்களா? எல்லாம் ஜனங்களுக்கு உங்கள் மேல் இருக்கிற அபிமானம். ‘உங்கள் பிரதம சிஷ்யன் பாடப் போகிறான்: கேட்க வேண்டும்’ என்று பெரிய பெரிய வித்துவான்களும், கனவான்களும், வெளியூரிலிருந்து கூட வந்திருக்கிறார்கள்” என்றார்.

உடனே பாகவதர், “என்னவோ போங்கள். சங்கீத வித்துவானுடைய வாழ்க்கை இப்படி முகஸ்துதியிலே மயங்கித்தான் போகிறது” என்றார்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை அண்ணா” என்று மறுத்த பாபு, “அப்பொழுது நான் வேண்டுமானால், தம்பூராவை எடுத்துக் கொண்டு முன்னால் புறப்படட்டுமா? நீங்கள் எல்லாரும் வண்டியில் வந்து சேருங்கள்” என்றார்.