உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

280

புல்லின் இதழ்கள்

உன்னையும், என்னையும் புரிந்து கொண்டு நடக்கும் பெண்ணை இந்த உலகத்தில் பார்க்கவே முடியாது.”

“நீங்களும் இப்படி என் பேச்சைத் தவறாகப் புரிந்து கொண்டு பேசுவீர்கள் என்று நானும் எதிர்பார்க்கவில்லை. இப்போது நான் அக்காவைப் பற்றியா குற்றம் சொன்னேன்? ஏன் உங்களுக்கு நான் எது பேசினாலும், குற்றமாகப் படவேண்டும்.”

“பார்த்தாயா? இதிலிருந்தே தெரிந்து கொள். கடவுள் எல்லாம் நல்லதைத்தான் செய்வார் என்று. நாம் இரண்டு பேருமே சந்தித்து, இரண்டு வார்த்தை தனியாகப் பேசிக் கொள்வதற்குள் உனக்குக் கோபம் வந்து விட்டது. சண்டை வந்து விட்டது. நீ தவறாகச் சொல்லவில்லை. ஏதோ வியாதிக்காரன், நானே உன்னைத் தவறாகச் சொல்லி விட்டேன். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளக் கூடாதா?”

‘எங்கே அன்பும், பாசமும் அதிகம் இருக்கின்றனவோ, அங்கேதான் சண்டையும், துக்கமும் இருக்கும் என்பார்கள். அது எனக்குத்தான் சரியாக இருக்கிறது’ என்று எண்ணிக் கொண்ட சுந்தரி, வாயைப் பொத்திக் கொண்டு, சப்தம் வெளியே வராதபடி முயற்சி செய்தாள். பாகவதர் அருகில் இருந்த அவளுடைய தலையை அன்புடன் தடவியபடியே கூறினார்: “நீ இன்னும் பச்சைக் குழந்தையாகவேதான் இருக்கிறாய், சுந்தரி. அன்றையிலிருந்து இன்று வரை அதே சுபாவம், அதே போக்கு, அதே குணம். பெண்ணுக்குக் கல்யாணம் செய்ய வேண்டிய வயது வந்த பிறகுங் கூட நீ இன்னும் அதே பழைய சுந்தரியாகவே இருக்கிறாய். துளியும் மாறுதல் இல்லை.”

பாகவதருடைய இந்த வார்த்தையைக் கேட்டதும், சுந்தரிக்குச் சட்டென்று நினைவுக்கு வந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டு, முகத்தைச் சற்றுத் தெளிவாக்கிக்—