உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணப் பேச்சு

279

அப்படியே பயல் உரித்து வைத்திருக்கிறான்’ என்று எல்லாரும் ஒவ்வொரு கச்சேரியையும் கேட்டு விட்டு, மூக்கின் மேல் விரலை வைக்கிறார்களாம்.

“இதையும் அவனே பெருமையாக வந்து, உன்னிடம் பீற்றிக் கொண்டானா?” என்று பாகவதர் சுந்தரியிடம் குறுக்கிட்டுக் கேட்ட போது, அவருடைய குரலில் ஹரி ஏதோ குற்றம் செய்து விட்டது போன்ற குறுகுறுப்புத் தென்பட்டது.

“நான் அப்படியா உங்களிடம் சொன்னேன்? ஹரிக்கு அப்படியெல்லாம் பேசத் தெரியுமா? எல்லாம் நம் ராஜப்பாவே வந்து சொல்லி விட்டுப் போனார்” என்றாள் சுந்தரி.

இதைக் கேட்டதும், பாகவதருடைய உள்ளம் உண்மையிலேயே மகிழ்ச்சியால் நிறைந்தது. இசையுலகில் தம் புகழையும், பரம்பரையையும் நிலை நாட்டச் சரியான வாரிசைத் தேர்ந்தெடுத்து விட்ட மன நிறைவு, அவர் உடலெல்லாம் பாவோடியது. அந்த நிம்மதியையாவது, அந்திம காலத்தில் தமக்கு அளித்த இறைவனுக்கு, அவர் இதயத்தினுள்ளேயே சிரம் தாழ்த்தி வணங்கினார்.

சுந்தரி அவரிடம் மெதுவாகக் கேட்டாள்: “இன்று உங்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசலாம் என்று நினைக்கிறேன். கேட்கலாமா? இப்படி ஒரு சந்தர்ப்பத்துக்கு எத்தனை நாளாய்க் காத்துக் கொண்டிருந்தேன்?”

இந்த வார்த்தைகளைக் கூறிய போது, சுந்தரியின் குரல் தழுதழுத்தது. பாகவதர் நீண்ட பெருமூச்சு விட்டார். பிறகு சுந்தரியைப் பார்த்துக் கூறினார்: “நீ லட்சுமியைப் பற்றி இப்படித் தவறாக நினைத்துச் பேசுவாய் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அவளைப் போல்,