உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

326

புல்லின் இதழ்கள்

“ஸென்டாவது, மண்ணாவது தம்பி! கல்யாணத்துக்கு நிக்கிற ரெண்டு அக்கா பெண்ணுங்களையும், மானம் போகாமே கட்டிக் கொடுத்தாப் பத்தாதா? நான் ஒண்ணு சொன்னாக் கோவிச்சுக்க மாட்டியே?”

“சும்மாச் சொல்லு மாமா!”

இருவரும் நடந்தே, கடைத் தெரு வரை வந்து விட்டனர். பக்கிரி மெதுவாகக் கூறினான்: “எங்கனாச்சும், ஒரு ஆயிரம் ரூபாய் புரட்டிக் கொடுத்தியானா, ரெண்டையும், எவன் கையிலாவது பிடிச்சுக் கொடுத்திடலாம். பின்னாலே, நமக்குப் பெரிய, மலையத்தனை பாரம் குறைஞ்ச மாதிரி.”

“ஆயிரம் ரூபாய்”?—ஹரியின் உதடுகள் முணுமுணுத்தன. அதில், இரண்டு பேருடைய வாழ்க்கை மலருகிறது. தன் சகோதரிகளுக்காக, அவன் இது கூடச் செய்ய வேண்டாமா?

“என்ன தம்பி யோசிக்கறே? கல்யாணச் செலவைப் பத்தியா?”

“ஆமாம்.”

“அதைப் பத்தி இப்போ என்ன தம்பி? உங்கிட்டே ஒரு வார்த்தை சொல்லி வச்சேன். சௌகரியப்படும் போது பார்த்துக் கிட்டாப் போவுது. இதுக்காக நீ வீணாக் கஷ்டப்படக் கூடாது.”

“கஷ்டம் ஒன்றும் இல்லை, மாமா. இந்தக் கல்யாணத்தைச் சீக்கிரமே நடத்தி விட வேண்டியதுதான். எனக்கு வேண்டியவர்கள் இந்தத் தஞ்சாவூரிலேயே இருக்கிறார்கள். நான் கேட்டால், எவ்வளவு வேண்டுமானாலும் கொடுப்பார்கள். அவர்களைக் கேட்டுத்தான், ஐயாவுக்குப் பெரிய வைத்தியமே செய்யலாம் என்று இருக்கிறேன்.”