கணையாழி
367
உடனே கேட்கவில்லை. அவன் யாருக்காகச் செய்யப் போகிறான்? அவனுடைய தங்கைகள் மணமாகாமலே நின்றால்தான், யாருக்கு என்ன வந்து விட்டது? அவன் மட்டும் இத்தனை படாடோபமாக, ராஜ வாழ்வு வாழும் போது அவனுடன் பிறந்த அந்தப் பெண்களுடைய திருமணச் செலவைத்தானா குறைக்க வேண்டும்? பட்டும், வைரமும் போட்டுக் கொண்டா இவர்கள் மினுக்கப் போகிறார்கள்? சட்டி, பானைகளோடு ஆயுள் முழுவதும் போராடப் போகிறவர்களின் வாழ்க்கையில், அந்த ஒரு நாளையாவது, மகிழ்ச்சி மிக்க நாளாக அவனால் ஆக்க முடியாதா?—
“என்ன தம்பி, பணத்தைப் பத்திப் பேசினவுடனே, பெரிசா யோசிக்கக் கிளம்பிட்டே? அது கூட அநாவசியம் தம்பி. இந்தப் பக்கிரியாலே கல்யாணத்தை இன்னும் சிம்பிளா முடிச்சுட முடியும் தம்பி! பசங்க ரெண்டு பேரும் தங்கக் கம்பிங்க. ஐயனார் கோயிலுக்கு இழுத்துக் கிட்டுப் போய்த் தாலியைக் கையிலே கொடுத்து, ‘கட்டுங்கடா’ன்னு சொன்னா; கண்ணை மூடிக்கிட்டுக் கட்டிடுவாங்க. நீ ஒண்ணுக்கும் கவலைப்படாதே தம்பி” என்று பக்கிரி ஆறுதல் கூறினான்.
ஹரி மெல்லச் சிரித்தான்.
“நான் இப்போது பணத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை மாமா! சிம்பிளா இல்லாமல், கொஞ்சம் நல்லபடியாவே செய்ய வேண்டுமென்றால், எத்தனை ரூபாய் வேண்டும் என்கிறாய்?”
“சுமார் இரண்டாயிரம், மூவாயிரம் இருந்தால் போதும். பிரமாதப்படுத்திப் பிடுவேன்.”
ஹரி முடிவுக்கு வந்தான். “சரி, என்னை அடுத்த மாசம் 24-ம் தேதி வந்து பாரு, மாமா.”