பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறட்டை

73


அது போன்ற முரைச்சலை நான் அதுவரையில் கேட்டதில்லை. மனிதனால் அது போன்ற ஒலி அலைகளை உண்டாக்க முடியுமா என்று எனக்கு இன்னும் ஐயமாகவே இருக்கின்றது. இத்தனை பெரிய மனிதன் குழந்தைகளுக்கு அச்சங் காட்டுவதுபோல ஏன் இப்படி என்னிடம் வந்து நடு இரவிலே 'கெர்முர்’ என்று உறுமுகிறான் என்று திரும்பிப் பார்த்தேன். அந்த வேளையில் என் உள்ளத்திலே கொடுஞ்சினம் கொதித்துக் கொண்டிருந்தது. அந்த ஆள் மட்டும் நான் எண்ணியபடி குறும்பு பண்ணிக் கொண்டிருந்தானானால் என்ன செய்திருப்பேனோ சொல்ல முடியாது. ஆனால் அந்த மனிதனே வாயைத் திறந்துகொண்டு ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிறான்!

அத்தனை கெர்முர் ரிலும் உறங்குகிறானே மனிதன்! அந்த ஆன்மாவின் திறமையைக் கண்டு எனக்கு வந்த கோபமெல்லாம் எங்கேயோ மறைந்துவிட்டது; ஒரு வியப்புணர்ச்சிதான் உள்ளத்திலே நிறைந்து நின்றது. உண்மையில் அவன் கும்பகர்னஜித்தாகத்தான் இருக்க வேண்டுமென்று நான் முடிவு கட்டினேன்.

இங்ஙனம் சிறிது நேரம் அவனை உள்ளூறப் பாராட்டி விட்டுக் கண்ணை இறுக மூடிக் கொண்டு படுத்தேன்; கையை வைத்துக் காதுகளையும் அடைத்துக்கொண்டேன். என்ன செய்தும் எப்படியோ அந்த உறுமல் எனக்குள்ளே புகுந்து மூளையில் தாக்கிக் கொண்டே இருந்தது.

உறுமலென்றாலும் ஒரே வகையாக வந்து கொண்டிருந்தால் கேட்பவருக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். நொடிக்கு நொடி நினைக்க முடியாத வெவ்வேறு ஒலி வடிவத்தில் வெளிப்பட்டால் யாரால்தான் அதைப் பொறுத்துக்கொள்ள முடியும்?