உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிவகங்கையில் சுயமரியாதை மாநாடு

71

1. ஈரோட்டில் தீட்டப்பட்ட, சுயமரியாதை சமதர்மத் திட்டம் என்பது, சுயமரியாதை இயக்கத்தில் பற்றுடைய சிலரால் எழுதப்பட்ட நகல்.

2. அத்திட்டத்தை வகுத்தவர்கள் அந்தச் சமயத்திற்கு ஏற்பட்ட கூட்டத்தார்கள்.

3.சங்க, கட்டு திட்ட சம்மந்தமாகச் சில பிழைகள் அடங்கியுள்ளன.

4. சட்டசபை, வட்ட, மாவட்ட சபைகளைப் பிடித்தல் சுயமரியாதைக் கொள்கைக்கு மாறுபட்டதாகும்.

5. சட்டசபைகளில் சமதர்மத்தை வாதிடல் ஆகாது. அதை அடைய, தொழிலாளர் அமைப்புகளின் வழியாகப் போர் புரிய வேண்டும்.

சுயமரியாதை இயக்கத்தின் அமைப்பாளர்களில் ஒருவரும், தந்தை பெரியாரோடு, சோவியத் நாட்டிற்குச் சென்று, பார்த்து வந்தவருமான தோழர் இராமநாதனின் கருத்து மாறுபாடு, அப்போது சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது. எனவே, தந்தை பெரியார் ‘குடியரசு’ தலையங்கத்தின் வழியாக, பதில் எழுதினார்.

‘சுயமரியாதை சமதர்மத் திட்டத்தைத் தீட்டுவதற்காக, ஈரோட்டில் கூடியவர்கள், அப்போதைக்குக் கூடிய வெளியார் கூட்டமல்ல. மாறாக, சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டுள்ள செயல் வீரர்கள் ஆவார். அப்படியிருப்பினும், அத்திட்டத்தை வட்ட, மாவட்ட மாநாடுகளைக் கூட்டி, அவற்றின் முன் வைக்கிறோம். அது வரை, பத்து இருபது மாநாடுகள் அத்திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளன. அதையொட்டி நூற்று இருபது சங்கங்கள் சமதர்மத் திட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளன.’ மேற்கூறிய பொருள்பட பெரியார் பதில் எழுதினார்.

மூத்த பொது உடைமைவாதியான தோழர் ம. சிங்கார வேலுவும், அதே ‘குடியரசி’ல் தனியொரு கட்டுரை வழியாக, தோழர் இராமநாதனுக்குப் பதில் கூறினார். அப்பதிலின் சுருக்கம் வருமாறு:

‘சுயமரியாதை சமதர்மத் திட்டத்தை’ உருவாக்கிய, ஈரோடு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பான்மையோர், சுயமரியாதை இயக்கக் குழுக்களின் உறுப்பினர்கள் ஆவார்.