பக்கம்:பொன்னொளி, அண்ணாதுரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

அதிகமாக, பூஜாபலத்தை நம்பிக்கொண்டு, மன்னர்கள் இருந்த காலம்.

சோமதேவனுக்கும், இந்திரனுக்கும்,வாயுவுக்கும், வருணனுக்கும், அக்கினிக்கும் மற்றும் பல தேவதைகளுக்கும், ‘யாகம்’ செய்யப்பட்டு, ஒவ்வோர் வகையான யாகத்தின் மூலமும் ஒவ்வோர் விதமான ‘பலன்’ கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், நாடாள்வோர் இருந்த காலம். ஓம குண்டத்தருகே கிளம்பும் வேதமந்திர ஒலிக்கு ஈடான சக்தி வாய்ந்த குரல்; வேறெதற்கும் இல்லை என்று பலரும் நம்பிக்கொண்டிருந்த நாட்கள். வேள்வி நடத்தவும் வேத மோதவும் ‘பிராமணர்’களுக்கு மட்டுமே பிறப்புரிமை உண்டு என்ற ‘தர்மம்’ எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்த காலம்.

பிராமண மார்க்கம், ஈடு எதிர்ப்பற்று அரசோச்சி வந்த நேரம்.

ஜாதி முறையைச் சந்தேகிக்கவோ, எதிர்க்கவோ, முடியும் என்ற எண்ணமே, ஏற்படாத நாட்கள்.

கடவுள், அவரவர்களுக்கென்று, குலத்தையும், ஒவ்வோர் குலத்துக்கென ஓர் தர்மத்தையும்,ஏற்கனவே அமைத்து வைத்துவிட்டிருக்கிறார், எனவே அந்தத் தர்மத்தைத் தவறினால் ஆண்டவனால் அழிக்கப்படுவர், என்ற அச்சம், எவர் உள்ளத்திலும் குடிகொண்டிருந்த காலம்.

வீராதி வீரனும், சாம்ராஜ்ய சிருஷ்டிகர்த்தாக்களும், பிராமண மார்க்கத்துக்கு அடிபணிந்தாலொழிய வாழமுடியாது என்ற அளவுக்கு, வைதிக மார்க்கத்துக்கு ஆதிக்கம் இருந்த காலம்.