பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114 ⚫ போதி மாதவன்

நிலைமை இவ்வாறிருக்கையில் நான் ஏன் நாட்டுக்குத் திரும்ப வேண்டும்?’

‘சித்தார்த்தர் கூறிய காரணங்களைக் குருதேவரோடு அமைச்சரும் நன்கு செவிமடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தார். அவை பொருத்தமானவை என்றே அவருக்குத் தோன்றின. ஆயினும் வந்த காரியம் முடிய வேண்டுமே என்பதற்காக, அவரும் சில நீதிகளையும், தத்துவ நூல் முடிபுகளையும் எடுத்துச் சொன்னார். காணமுடியாத பயனைக் கருதிக் கண் முன்பு கிடைக்கும் பயனைக் கை விடு தல் ஆராய்ச்சிக்குப் பொருத்தமில்லை என்றும், சிலர் மறுபிறப்பு உண்டென்றும், சிலர் இல்லையென்றும் கூறுவதால் எல்லாம் குழப்பமாகவே இருக்கிறது என்றும், சிலர் எல்லாப் பொருள்களும் அதன தன் சுபாவத்தினாலே தாமாகவே தோன்றியுள்ளதாகக் கூறுகின்றனர் என்றும், அவர் தத்துவ முரண்பாடுகளை எடுத்துக் காட்டினார்.

பொருள்களின் இயல்பை மனிதர் மாற்ற முடியா தென்றால், வேதனைகளையும், வயோதிகத்தையும், மரணத்தையும் ஒழித்து விட முயல்வது வீண் வேலையாகும் என்றும் அவர் கூறினார். ‘முள்ளைக் கூர்மையாக்கியது யார்? மானின் இனங்களுக்கும், பறவை இனங்களுக்கும், அவைகளின் பலவகைப்பட்ட உருவங்கள், நிறங்கள், பழக்கங்களை அளித்தது யார்? சுபாவமே! எவருடைய இச்சை காரணமாகவும் இவை ஏற்படவில்லை; இச்சையோ கருத்தோ இல்லாதபோது, இச்சைப்படுவானோ, கருதுவோனோ இல்லாமற் போகிறான்’ என்று கூறுவோ ருடைய கருத்தையும், ‘ஈசுவரனிடத்திலிருந்தே சிருஷ்டி ஏற்படுவதால் ஜீவான்மா என்ன முயற்சி செய்ய வேண்டி யிருக்கிறது? உலகத்தை இயங்க வைப்பவனே அந்த இயக்கம் நிற்க வேண்டியதையும் கவனித்துக் கொள்வான்’ என்று கூறுவோருடைய கருத்தையும் அவர் விளக்கி யுரைத்தார்.