116 ⚫ போதி மாதவன்
‘பரம்பரையாக வந்த புனிதமான சாத்திரங்களே எதையும் உறுதிப் படுத்திக் கூற முடியவில்லை. நம்பிக்கைக்கு உரியவர்கள் கூறியுள்ளதே நன்மையானதா யிருக்கும். நம்பிக்கை என்பது மாசுகளற்ற நிலையிலேயே தோன்றும். மாசற்றவர் அசத்தியம் கூற மாட்டார்.
‘நீங்கள் சொல்லிய மன்னர்கள் பலரும் தங்கள் விரதத்தை முறித்து நாடு திரும்பியவர்கள், கடமையை உணர்வதற்கு அவர்கள் எப்படி வழிகாட்டிகளாக விளங்க முடியும்?
‘ஆதலால் என் உறுதியை எதுவும் கலைக்க முடியாது. கதிரவனே வானத்திலிருந்து மண் மீது வீழ்ந்து விட்டாலும், இமயமலையே அசைந்து ஆடி விட்டாலும், மெய்ப் பொருளை அறியாமல், வெளிப் பொருள்களிலே நாட்டம் செலுத்தும் புலன்களோடு, நான் என் மாளிகைக்குத் திரும்பப் போவதில்லை!
‘என் இலட்சியத்தை அடையாமல் நான் என் மாளிகைக்குத் திரும்புவதைவிட, எரிகின்ற தழலிலே மூழ்கி விடுவேன்!’
இவ்வாறு கூறிவிட்டுச் சித்தார்த்தர், தம் சொற்களைச், செயலிலே காட்டுவது போல, அங்கிருந்து எழுந்து வழி நடைக் கொண்டு விட்டார்.
அமைச்சரும், குலகுருவும் அண்ணல் சென்ற திசையைப் பார்த்துக் கொண்டே, தங்கள் வழியே திரும்பினர். இருவர் கண்களிலும் மழை நீர் பொழிவது போலக் கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது.
தருமத்தைத் தவிர வேறு துணையின்றி, மன்னுயிர் முதல்வரான போதி சத்துவர் காட்டு வழியாகத் தமது புனித யாத்திரையை மேற்கொண்டார். இளவரசர் சித்தார்த்தராக அவ்வனத்தில் நுழைந்தவர் கௌதம பிக்குவாக வெளியேறி நடந்து கொண்டிருந்தார்.