பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நந்தன் ⚫ 272

‘மனிதன் அழகை அழிப்பதில் முதுமைக்கு இணை வேறில்லை; துன்புறுத்துவதில் நோய்க்கு இணை வேறில்லை; அபாயங்களில் மரணத்தை விட வேறு என்ன இருக்கிறது? நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இவை ஏற்பட்டே தீரும்.

‘பற்று பெரிய விலங்கு; ஆசை பெரிய வெள்ளம்; காமம் பெருநெருப்பு-உலகிலே இந்த மூன்றும் இல்லாதிருந்தால்தான், உனக்கு இன்பம் நிலைத்திருக்கும்.

‘ஒருவனுடைய அன்புக்கு உரியவர்களிட மிருந்து பிரிவு ஏற்பட்டே தீரும்; துக்கமே தவிர்க்க முடியாத அனுபவமாயிருக்கிறது.

‘ஆதலால் ஞானம் என்னும் கவசத்தை நீ அணிந்து கொள். பொறுமையுள்ளவன் மீது துக்கத்தின் அம்புகள் பாயமுடியாது. சிறு நெருப்பை மூட்டிப் பெரிய புற்குவியலை எரியச் செய்யலாம்; அதுபோல் பிறவியை ஒழிப்பதற்கு உனக்குள்ள வீரியத்தைத் தூண்டிக்கொள்!

‘பச்சிலை வைத்திருப்பவனைப் பாம்பு தீண்டாது; உலகப் பற்றைத் துறந்தவனை–மாயையை வென்றவனைத் துக்கமாகிய பாம்பு தீண்ட முடியாது.

�'தியானத்தினாலும், சமாதியாலும் முடிவான உண்மையை உணர்ந்து கொள்பவன் மரணத்திற்கு அஞ்சமாட்டான்; போர் முறைகளில் சேர்ந்தவன் இரும்புக்கவசம் அணிந்து, நல்ல வில்லும் ஏந்தி வெற்றிக்காகப் போராடுபவன்-யுத்த காலத்திலே சோர்வுற மாட்டான்!’