ஜேத வனம் ⚫ 289
‘காமமாகிய வெள்ளம் யாவர்க்கும் அபாயம் விளைக்கும்; உலகத்தையே அது அடித்துக் கொண்டு போய்விடுகின்றது. அதன் சுழல்களிலே சிக்கியவனுக்கு மீட்சிபெற வழியில்லை. ஆனால் ஞானம் என்னும் ஓடம் அந்த வெள்ளத்திலிருந்து காக்கும். ஆழ்ந்த தியானமே அதன் துடுப்பு.
‘நாம் நம் செயல்களின் பயன்களிலிருந்து தப்ப முடியாது; ஆதலால் நல்வினைகளையே நாம் செய்து வரவேண்டும்
‘நம் சிந்தனைகளைத் துருவிப் பார்க்க வேண்டும்; அவற்றால் தீயசெயல்கள் விளைந்து விடாமல் கவனிக்க வேண்டும்; ஏனெனில் நாம் விதைப்பதை நாமே அறுவடை செய்ய வேண்டியிருக்கும்.
‘ஒளியிலிருந்து இருளுக்குச் செல்வதற்கும், இருளிலிருந்து ஒளிக்குச் செல்வதற்கும் வழிகள் இருக்கின்றன. இருளிலிருந்து அதிக இருளுக்கும், ஒளியிலிருந்து அதிக ஒளிக்குப் போவதற்கும் வழிகள் இருக்கின்றன. ஞானி அதிக ஒளியைப் பெறுவதற்குத் தன்னிடமுள்ள ஒளியைப் பயன்படுத்திக் கொள்வான். எப்போதும் அவன் உண்மையை உணர்ந்து கொள்வதற்காக இடை விடாமல் முன்னேறிக் கொண்டேயிருப்பான்!
“நல்லொழுக்கத்தாலும் ஆராய்ச்சி அறிவாலுமே, உமது மேன்மையைக் காட்ட வேண்டும். உலகப் பொருள்களின் போலித் தன்மையைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கவும். சிந்தித்து வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை உணர்ந்து கொள்ளவும்.