பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசாகை ⚫ 323

பொழுது விடிந்ததும் பார்த்திபர் கனவு நூல் வல்லுநர் பலரை அழைத்து விசாரித்தார். ஆனால் அவர் கண்ட கனவுகளின் பொருளை அவர்களால் விரித்துரைக்க முடிய வில்லை. கடைசியாக மான் தோல் உடையுடன் ஒரு வயோதிகத் துறவி அரண்மனைக்கு வந்து அரசர் கண்ட கனவுகளைப் பற்றி விளக்கியுரைத்தார். அரசர் அவைகளை எண்ணித் துயரப்படாமல் மகிழலே வேண்டும் என்று அவர் கூறினார். யானைகள் உலகு அதிரும்படி சென்றது சித்தார்த்தர் பத்து வகை ஞானமும் பெற்று உலகுக்கு அறத்தினை உபதேசிப்பதாகும் என்றும், நான்கு குதிரைகள் பூட்டிய இரதம் நான்கு வகை வாய்மைகளுடன் பொருந்திய அவருடைய தரும இரதம் என்றும், பொன்னாலான திகிரி சுழன்றது அண்ணல் உருட்டப் போகும் அற ஆழியைக் குறிக்கும் என்றும், பேரிகை முழக்கம் அவருடைய அருளறம் பல நாடுகளிலும் வெற்றிகரமாகப் பரவுவதை குறிக்கும் என்றும், அவர் கனவுகளுக்குப் பொருள் கூறி மன்னரைச் சமாதானப்படுத்தினார்.

மேலும், ஏழு நாட்களில் கனவில் கண்ட காரியங்கள் பலிக்க ஆரம்பிக்கும் என்றும், செல்வமும் சிறப்பும் வாய்ந்த இராஜ்யங்களைப் பார்க்கிலும் பெரிய செல்வங்களைச் சித்தார்த்தர் அடைவார் என்றும், அவருடைய துவாரடை பொன்னாடைகளை விடச் சிறப்புடையதாக விளங்கும் என்றும் கூறி, அத்துறவி மிக்க விநயத்துடன் வணக்கம் செய்து விட்டுத் திடீரென்று எழுந்து வெளியே சென்று விட்டார். மன்னர் அவருக்குச் சேர வேண்டிய பரிசுகளைப் பணியாளர் மூலம் அனுப்பி வைத்தார். ஆனால், அவர்கள் அவரைக் கண்டுபிடிக்க முடியாமல் திரும்பி விட்டனர். ‘அவர் ஓர் ஆலயத்துள் நுழைவதைக் கண்டு நாங்களும் உள்ளே சென்று எங்கும் தேடினோம். அவர் எப்படியோ மாயமாய் மறைந்து விட்டார். ஆலயத்துள் ஒரே ஒரு வௌவாலைத் தவிர வேறு உயிர்