பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

அறத்தின் குரல்

சோதித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவனுக்கு உண்டாயிற்று.

அவன் முன்பிருந்த சினத்தை மறைத்துக் கொண்டு வீமனை நோக்கிச் சிரித்தபடி கேட்கலானான்: “அது சரி அப்பா! கேவலம் ஒரு மானிடனைத் தன் தோள்களில் ஏற்றிக் கொண்டு சுமந்து இழித்தொழிலைச் செய்தவன் அந்த அனுமன் தவம் செய்து உயர்நிலை பெறுவதற்கு முயன்று கொண்டிருக்கும் எனக்கு ஒப்பாக அந்தக் குரங்கை நீ கூறுகிறாயே! இது சிறிதாவது பொருந்துமா?”

வீமன் கலகலவென்று சிரித்தான். “மனிதனைச் சுமந்த அந்தக் குரங்கின் பெருமையைப் பற்றி உனக்குச் சொல்லுகிறேன் கேள். இலங்கையை அழித்தது அந்தக்குரங்கு தான். தீயோரை ஒறுத்து நல்லோரைக் காக்கும் பரம் பொருள்வதாரமாகிய இராமபிரானுக்கே பக்கபலமாக இருந்து வெற்றி நல்கியது அந்தக் குரங்குதான். அதையும் அதன் தலைவனையும் நீ சாதாரணமாக எண்ணி இகழ்வது உன்னுடைய பெரும் பேதைமையைத்தான் காட்டுகிறது” -வீமனின் பதிலைக் கேட்ட அனுமன் அப்படியே மார்புறத் தழுவிக் கொண்டான்.

எல்லாம் தெரிந்திருந்தாலும் வெளிக்குக் கேட்பது போல “நீ யார் அப்பா? என்ன காரியமாக இந்தப் பக்கம் வந்தாய்?” -என வீமனை நோக்கிக் கேட்டான். வீமன் தன்னைப் பற்றிய விவரங்களையும் தான் வந்த காரியத்தையும் கூறினான். ‘'நான் தான் அப்பா உன் அண்ணன் அனுமன். இதோ என் சுய உருவத்தைப் பார். இதுவரை உன் துணிவையும் எண்ணங்களையும் சோதித்துப் பார்ப்பதற்காக ஏதேதோ கூறினேன் அதை மனதிற்கொண்டு வருந்தாதே!” -என்று கூறினான். வீமன் உடனே நெடுஞ்சாண்கிடையாகக் கீழே விழுந்து அனுமனை வணங்சி மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். மீண்டும் அனுமனுடைய விசுவரூபத்தைப் பார்க்க வேண்டும் என்று அவன் வேண்டிக் கொள்ளவே அனுமன் விசுவரூபமெடுத்துக் காட்டினான்.