பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

521


சூரியன் ஒளி மங்கி மறையப் போகிற நேரம், அத்த மனகிரியை அவன் அடைவதற்கு இன்னும் இரண்டு விற்கிடை (வில் கிடக்கின்ற அளவு தூரம்) தான் இருந்தது. அந்தச் சமயத்தில் கண்ணன் அர்ச்சுனனை நோக்கி, “அர்ச்சுனா! சிறிது நேரம் போரை நிறுத்து. ஒரு முக்கியமான காரியமாக நான் எதிரி பக்கத்தில் போய் ஓர் ஆளைப் பார்த்துவிட்டு வரவேண்டும்” என்று கூறினான். அர்ச்சுனன் அதற்கிணங்கிப் போரை நிறுத்தினான். கண்ணன் தேரிலிருந்து இறங்கி ஒரு வயதான கிழவேதியனைப் போல் தன்னுடைய உருவத்தை மாற்றிக் கொண்டு கர்ணன் இருந்த இடத்திற்குச் சென்றான். யாரோ ஒரு வேதியர் பருவம் முதிர்ச்சியையும் பாராமல் நம்மை நாடி வருகின்றாரே’ என்று வியந்த வண்ணமே தேரிலிருந்து கீழே இறங்கி மரியாதையாக நின்று கொண்டு, “ஐயா வேதியரே! வாருங்கள். நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று அவரை வரவேற்றான் கர்ணன்.

“கொடை வள்ளலே! நான் மேருமலையில் இறைவனை எண்ணித் தவம் செய்து கொண்டிருந்தவன். வருவோர்க்கெல்லாம் ‘வரையாது வழங்கும் வள்ளல்’ என்று உன்னைப் பற்றிக் கேள்விப்பட்டேன். நான் ஏழ்மையினால் பெருந்துன்பமடைந்தவன். உன்னைத் தேடி இப்போது வந்திருக்கிறேன். நீ எனக்குச் செய்ய முடிந்த உதவியை இப்போதே செய்தால் நல்லது!” என்று மாய வேதியனாகிய கண்ணன் நடிப்புக்காக வரவழைத்துக் கொண்ட கிழட்டுக் குரலில் கர்ணனை வேண்டிக் கொண்டான்.

ஒரு பாவமுமறியாத கர்ணன் அந்த வேதியனுக்காக மனம் இரங்கினான். “ஐயா வயது முதிர்ந்த அந்தணரே, உமக்கு என்னிடமிருந்து எது வேண்டுமோ அதைக் கேளும்! கட்டாயம் கொடுக்கிறேன்” - கர்ணனின் குரலில் உறுதி தொனித்தது. “வள்ளல் பெருந்தகையே! இதுவரை நீ செய்திருக்கும் புண்ணியம் எல்லாவற்றையும் எனக்கு அப்படியே கொடு. நீ சொன்ன சொல் தவறாதவன். ஆகவே நான் கேட்டதைத் தயங்காமல் கொடுப்பாய் என்று எண்ணுகிறேன்."