பக்கம்:மணி பல்லவம் 1.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

181

“ஓகோ, இளங்குமரனைப் பற்றிக் கேட்கிறாயா? நாளைக்கு அவசியம் இங்கே வருவான் அம்மா. வராவிட்டாலும் நானே அவனைத் தேடிச்சென்று பார்க்க வேண்டிய காரியம் இருக்கிறது.”

“அப்படித் தேடிச் சென்று பார்த்தால் அவரை மறவாமல் இங்கே அழைத்து வரவேண்டும் அப்பா! இன்றைக்குத்தான் அண்ணனுக்கும் அவருக்கும் செய்து வைத்திருந்த விருந்துணவெல்லாம் வீணாகி விட்டது, நாளைக்காவது அவரை இங்கே விருந்துண்ணச் செய்ய வேண்டும்.”

பெண்ணின் ஆவலைத் கேட்டு வளநாடுடையார் தமக்குள் சிரித்துக் கொண்டார்.

மறுநாள் காலை இளங்குமரனை தங்கள் இல்லத்துக்கு வந்தால் துணிவோடு அவனை வாயிலிலே எதிர்கொண்டு சென்று “நீங்கள் இந்த வீட்டுக்கெல்லாம் வந்து விருந்து உண்ணுவீர்களா? பட்டினப்பாக்கத்துச் செல்வக் குடும்பத்து நங்கையர் எவரேனும் பல்லக்கில் ஏற்றிக் கொண்டு பகட்டாக அழைத்துப் போனால் போவீர்கள். இந்த முல்லைக்கு மனத்தைத் தவிர வேறு செல்வம் கிடையாது ஐயா! அவள் இந்தச் செல்வத்தைத்தான் உங்களுக்குத் தரமுடியும். பல்லக்கும் பரிவாரமும் வைத்துப் பாங்காக அழைத்து விருந்தளிக்க இந்த ஏழை மறவர் குடும்பத்துப் பெண்ணுக்கு இயலாது. உடன் வந்தவளை மறந்து ஊர் சுற்றப் போன பின்பும் உங்களை என்னால் மறக்க முடியவில்லையே?” என்று குத்தலாகப் பேச வேண்டுமென்று நினைத்துக் கொண்டு, அப்படி அவரிடம் இடுப்பில் கையூன்றி எதிர் நின்று தான் பேசுவது போன்ற காட்சியையும் கற்பனை செய்து பார்த்துக் கொண்டாள் முல்லை. அவ்விதமாகக் கற்பனை செய்வது வெப்பமும் தட்பமும் கலக்கும் அந்தப் பின்னிரவுப் போதில் மனத்துக்கும் உடம்புக்கும் சுகமான அனுபவமாக இருந்தது அவளுக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/182&oldid=1141985" இலிருந்து மீள்விக்கப்பட்டது