பக்கம்:மணி பல்லவம் 1.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்ததசாரதி

289

இன்றோ, முப்பதாவது வயதுக்கு இன்னும் சிறிது காலமே எஞ்சியிருக்கக் கூடிய முழுமையான இளமையின் கனிவில் நிற்கிறான் அவன். அவனுடைய சுந்தர மணித் தோள்களிலும், பரந்த பொன்நிற மார்பிலும், ஏறு போன்ற, நடையிலும், எடுப்பான பார்வையிலும், மெல்லியலார் சொல்லிப் புகழுகிற இளநலம் மலரும் பருவம் இது. இந்தப் பருவத்தில் இன்று அவனுக்கு ஏற்பட்ட ஆசையோ விசித்திரமானதாயிருந்தது. இலக்கண இலக்கியங்களையும், மகா காவியங்களையும், மிகப்பெரிய ஞான நூல்களையும், சமய சாத்திரங்களையும், தத்துவங்களையும் முற்றிலும் முறையாகக் குறைவின்றிக் கற்றுக் காலையில் இந்திர விகாரத்தில் சந்தித்த துறவியைப்போல் ஞான வீரனாக நிமிர்ந்து நிற்க வேண்டுமென்னும் ஏக்கம் அவன் மனத்தில் ஏற்பட்டிருந்தது. வெறும் ஏக்கமாகத் தோன்றிய இது அவன் வாழ்க்கையில் புதிய திசையில் பிறந்த புது வழியாகவும் அமையும் போலிருந்தது. உடம்பை வலிமையாகவும், வனப்பாகவும் வளர்த்ததைப் போலவே மனத்தையும் வளர்க்க ஆசைப்பட்டான் அவன். சோற்றுக்கு இல்லாமையும், துணிக்கு இல்லாமையும் பெரிய ஏழ்மையல்ல; மெய்யான ஏழைமை அறிவின்மைதான். மெய்யான செல்வம் அறிவுடமைதான்’ என்ற புதிய உணர்வு என்றுமில்லாமல் இன்று தன் மனத்தில் ஆழ்ந்து தோன்றுவதற்குக் காரணமென்ன என்பது இளங்குமரனுக்கே புரியாத பெரும் புதிராயிருந்தது.

இந்திர விகாரத்தில் அந்தத் துறவியைச் சந்தித்து அவரோடு வம்புக்குப் போக நேர்ந்திராவிட்டால் இப்படியொரு தவிப்பைத் தான் உணர இடமில்லாமற் போயிருக்குமோ என்று சிந்தித்தான் அவன். அந்தச் சிந்தனையின் போது தன் வாழ்வில் மலர்வதற்கிருந்த அல்லது மலர வேண்டிய வேறு ஓர் அழகிய பருவத்துக்குத் தூண்டுதல் போலவே இந்திரவிகாரத்துத் துறவியின் சந்திப்பு வாய்த்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் உறுதிப் பட்டது.

ம-19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/290&oldid=1142118" இலிருந்து மீள்விக்கப்பட்டது