பக்கம்:மணி பல்லவம் 1.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

291

“தம்பீ! சோழ நாட்டிலேயே சான்றாண்மை மிக்க வரும் பெரிய ஞானியுமாகிய அடிகளின் அருள் நோக்கு உன்பக்கம் திரும்பியிருக்கிறது. முக்காலமும் உணரவல்ல அருமை சான்ற பெரியவர்களுடைய அன்பும் ஆதரவும் வலுவில் ஒருவனைத் தேடிக்கொண்டு வருவது பெரும் பாக்கியம். அந்தப் பாக்கியம் இப்போது உனக்குக் கிடைக்க இருக்கிறது! அதை நன்றாகப் பயன்படுத்திக் கொள்வது உன் பொறுப்பு.”

நாத்தழுதழுக்க அவர் இவ்வாறு கூறியதைக் கேட்டபோது இளங்குமரனுக்கு என்ன காரணத்தாலோ மெய்சிலிர்த்தது. அவரை உள்ளே அமரச் செய்து தேரை அவனே செலுத்திக் கொண்டு சென்றான். தேர் புற வீதிக்குள் நுழைந்து வளநாடுடையார் இல்லத்தைக் கடந்தபோது வாயிலில் நின்று கொண்டிருந்த முல்லை கையை உயரத் தூக்கி ஏதோ சொல்லிக் கூப்பிட்டதை இளங்குமரன் கவனித்தும் அப்போது அவளுக்காகத் தேரை நிறுத்தவில்லை. அதேபோல் நாளங்காடியின் திருப்பத்தில் எதிரே மிக அருகில் வந்த மற்றொரு தேரில் சுரமஞ்சரியும் வானவல்லியும், வசந்தமாலையும் அமர்ந்திருந்ததைக் கண்டும் அவன் தேரை நிறுத்தவில்லை. ஆனாலும் விநாடியில் தேர்களின் வேகத்தையும் மீறிச் சுரமஞ்சரியின் முகத்தில் தன்னைப் பார்த்ததால் ஏற்பட்ட சிறிது மலர்ச்சியை அவன் கவனிக்கும்படி நேர்ந்தது. காலையில் துறைமுகத்தில் தன்னிடம் கோபித்துக் கொண்டு பிணங்கி ஓடியபோது அவள் இருந்த நிலையையும், இப்போது எதிரே தேரில் சந்தித்தபோது இருந்த நிலையையும் ஒப்பிட்டு நினைத்தான் இளங்குமரன். மிகவும் அழகிய பெண்களின் மனத்துக்குள் அழகைப் போலவே பலவீனங்களும் மிகுதி என்று தோன்றியது அவனுக்கு. தேர் காவிரிப்பூம் பட்டினத்தின் அழகிய பகுதிகளை ஒவ்வொன்றாகக் கடந்து திருநாங்கூருக்குச் செல்லும் வழியில் இளங்குமரனுக்குப் பல அறிவுரைகளைக் கூறிக்கொண்டு வந்தார் நீலநாக மறவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/292&oldid=1142120" இலிருந்து மீள்விக்கப்பட்டது