நா. பார்த்தசாரதி
63
முயலாத நான் இப்போதுதான் சிறிது காலமாக அவன் உள்ளமும் வளர்வதற்கு உரியவைகளைக் கற்பித்துக் கொண்டு வருகிறேன். இவற்றைத்தான் அவனைப் பற்றி இப்போது நான் உங்களிடம் கூற முடியும்.”
“இவற்றில் புதிதாக எந்த உண்மையையும் எனக்கு நீங்கள் கூறவில்லையே, முனிவரே?”
“உண்மை வேறு, வாய்மை வேறு, மெய்மை வேறு, உடையாரே! உள்ளத்துத் தூய்மை உண்மை. சொல்லில் தூய்மை வாய்மை. உடல் ஈடுபட்டு நிகழும் செயலில் தூய்மை மெய்ம்மை. இந்த மூன்றாலும் இளங்குமரனுக்கு ஒருபோதும் நான் தீங்கு நினைத்ததில்லை.
“வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றும்
தீமை யிலாத சொலல்”
என்றுதான் நம் முன்னோர்கள் வாய்மைக்கு வரையறை வகுத்திருக்கிறார்கள். பிறருக்குத் தீமை தரும் உண்மையைக் கூறுவதும் பொய். பிறருக்கு நன்மை தரும் பொய்யைக் கூறுவதும் வாய்மை! இளங்குமரனைப் பற்றிய சில உண்மைகளை நான் கூறாமல் மறைத்து வருகிறேனென்பதற்குக் காரணம், அந்த உண்மைகள் வெளியாகும்போது அவற்றால் இளங்குமரனுக்கு ஏற்படும் நன்மைகளைக் காட்டிலும் தீமைகள் அதிகமென்பதுதான்.
“நான் ஏதோ அந்தப் பிள்ளையைப் பற்றி அவனுக்கு முன்னாலேயே ஏளனமாகப் பேசுகிறேனே என்பதனால், என்னை அவனுக்கு ஆகாதவன் என்று நினைத்து நீங்கள் பயப்பட வேண்டாம் முனிவரே! அந்தரங்கமாக எனக்கு அவன்மேல் நிறைந்த அனுதாபம் உண்டு. இல்லாவிட்டால் என் மகளுக்கு அவனை மணமகனாக்கிக் கொள்ளும் ஆவலை உங்களிடம் கூறியிருப்பேனா அடிகளே? இளங்குமரன் சோழர் படைக்குழுவிற் சேர்ந்து பெருவீரனாகப் புகழ்மாலை சூட வேண்டுமென்றெல்லாம் எனக்கு ஆசை உண்டு. அந்தப் பிள்ளையின் தோற்றமும் உடலின் வலிமையும் எத்தனையோ பெரிய காரியங்களைச்