பக்கம்:மணி பல்லவம் 2.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

420

மணிபல்லவம்

நீங்களோ உங்கள் பெண்ணோ என்னுடைய அதைரியமாக நினைத்துவிட்டால் என்னால் பொறுக்க முடியாது.”

“நீங்களும் உங்கள் பேச்சும் எப்போதும் புதிராகவே இருக்கிறது.”

“இருக்கலாம். ஆனால் பாலில் நஞ்சு கலந்து கொடுப்பதால் அந்தப் புதிருக்கு விடை கிடைத்துவிடாது.”

“பார்த்தீர்களா! நண்பரான பின் மறுபடியும் பகையை உண்டாக்கிப் பேசுகிறீர்களே?”

“பேச்சில் என்ன இருக்கிறது? நண்பர்களைப் போல் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் பகைமையான செயலைச் செய்வதும், பகைவர்களைப் போலப் பேசிக் கொண்டிருந்து விட்டு நட்புக்கான காரியத்தை நடத்துவதும் நமக்குள் புதுமை இல்லையே?” என்று மேலும் ஆழமாக நெஞ்சில் இறக்கும்படி குத்திப் பேசினார் நகைவேழம்பர். பெருநிதிச் செல்வருக்குச் சுருக்கென்று தைத்தது இந்த வார்த்தை.

“நான் வேண்டுமானால் உங்களுக்குச் சத்தியம் செய்து தருகிறேன். பக்கத்திலுள்ள கடலும், காவிரியும் சாட்சியாக நாமிருவரும் இனிமேல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதில்லை என்று வைத்துக் கொள்ளலாமே?”

“வேண்டவே வேண்டாம். சத்தியம், சபதம் இப்படிப்பட்ட வார்த்தைகளின் பொருளை உங்களாலும் காப்பாற்ற முடியாது. என்னாலும் காப்பாற்ற முடியாது. தொடக்க நாளிலிருந்தே நியாயத்திலிருந்து வெகுதூரம் வழி விலகி வந்துவிட்டோம் நாம். எல்லாரும் நியாயமாகச் செல்கிற வழிக்கு நாம் இனிமேல் திரும்புவதைவிட நாம் வந்துவிட்ட வழிதான் நமக்கு நியாயம் என்று வைத்துக் கொள்வது நல்லது.”

பொழுது புலரும் வேளை நெருங்கிக் கொண்டிருந்தது. இருளில் மங்கலாகத் தெரிந்து கொண்டிருந்த நாணற் பூக்கள் வெண்பனிப் பாய் விரித்தாற்போல நெடுந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/126&oldid=1149926" இலிருந்து மீள்விக்கப்பட்டது