பக்கம்:மணி பல்லவம் 2.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

353

பெருமலை நகர்ந்து வந்ததுபோல் முன் வந்து நின்று கொண்டு இப்படிக் கேட்ட அந்தத் தோற்றத்தை நகை வேழம்பரும் அவருடனிருந்த முரட்டு மனிதர்களும் அண்ணாந்து பார்த்தார்கள். நகைவேழம்பர்தான் துணிந்து பதில் பேசினார்.

“உங்களுக்குப் பின் ஒளிந்துகொண்டு அடைக்கலம் கேட்கிறானே, அந்தப் பிள்ளையாண்டான் திருடன். பட்டினப்பாக்கத்துப் பெரு மாளிகையிலிருந்து மணிமாலையைத் திருடிக் கொண்டு ஓடிவந்துவிட்டான். அவனை எங்களிடம் விட்டுவிட வேண்டும்.”

“நீங்கள் சொல்வதை நான் நம்பவில்லை. இந்தப் பிள்ளையின் பயத்தையும் நடுக்கத்தையும் பார்த்தால் இவனைத் திருடும் தொழிலுக்குத் துணிந்தவன் என்று திருடர்களே ஒப்பமாட்டார்களே! நியாயமாகப் பார்க்கப் போனால் இந்தப் பிள்ளைதான் தைரியத்தை உங்களிடம் திருட்டுக் கொடுத்துவிட்டு நிற்கிறான் இப்போதும்!” என்று கூறிக் கொண்டே நகைவேழம்பருக்கு அருகிலிருந்தவன் கையில் வைத்திருந்த இளங்குமரனின் ஒவியத்தை வலித்து அவனிடமிருந்து பறித்தார் நீலநாகமறவர். அவன் படத்தை விடாமல் இறுக்கிப் பற்றினான்.

“ஓகோ! அவ்வளவு பலமிருக்கிறதா உன் உடம்பிலே” என்று படத்தை ஓங்கி இழுத்தார் நீலநாகர். படம் அவர் கைக்கு வந்தது. படத்தை விட்டு விட்ட அதிர்ச்சியில் அதை வைத்துக் கொண்டிருந்தவன் தடுமாறிக் கீழே விழுந்தான். நகைவேழம்பர் ஒற்றைக் கண்ணில் சினம் பொங்க, இடுப்பிலிருந்து குறுவாளை உருவிக் கையை ஓங்கிக் கொண்டு நீலநாகமறவர் மேல் பாய வந்தார்.

ஓங்கிய கையை நீலநாகர் தமது இடது கையால் அலட்சியமாகப் பிடித்து நிறுத்தினார் பின்பு மெல்லச் சிரித்துக் கொண்டே ஏகவசனத்தில் விளித்துக் கேட்டார்; “அப்பனே, கண்களில்தான் ஒன்றை இழந்து விட்டாய்: உயிரையும் இப்போது என்னிடம் இழக்க விரும்புகிறாயா நீ”

ம-23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/59&oldid=1149665" இலிருந்து மீள்விக்கப்பட்டது