பக்கம்:மணி பல்லவம் 4.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

713

தான் கற்ற கவிதையில் வந்த உவமை இப்போது அவளுக்கு மீண்டும் நினைவு வந்தது.

வில்லில் இருந்து புறப்பட்டுப் பாய்ந்து கொண்டிருக் கிற அம்பின் நிழலைப்போல இந்த வாழ்வின் வேகத்திற்கு இடையே சுகங்களும் தோன்றித், தோன்றிய வேகத்திலேயே அழிந்துகொண்டிருக்கின்றன.

தோன்றுவதாவது, அழிவதாவது தோன்றினால் தானே அழிய முடியும்? என்னுடைய வாழ்க்கையில் நான் ஆசைப்படுகிற சுகங்கள் இன்னும் தோன்றவே இல்லையே! கிழக்குப் பக்கத்திலிருந்து தெரியும் ஒளி மேற்குப் பக்கத்தில் ஓடி மறைவதற்குள் இந்தச் செல்வச் சிறைக்குள் எத்தனை சுகங்கள் தோன்றிட முடியும்? ‘நான் மட்டும் கவியாகப் பிறந்திருந்தேனானால் இப்போது உங்களுடைய துக்கங்களை யாரிடம் போய்ச் சொல்ல வேண்டுமோ அவரிடம் போய் அழகிய உவமை உருவங்களோடு சொல்லிவிடுவேன் அம்மா!’ என்று வசந்தமாலை குறைப்பட்டுக் கொள்கிறாள். இங்கே எனக்குச் சுகம் இல்லை. சுகத்தைப் பற்றிய நினைவுகளும் ஏக்கங்களுமே நிறைய இருக்கின்றன. நினைவே அதுபவமாகிவிடாது. ஏக்கமே, எதற்காக ஏங்குகிறோமோ அதை அடையும் முயற்சியாகி விடாது. நினைப்பதும் ஏங்குவதும், மனத்தின் பசிக்கு அடையாளங்கள். அவற்றாலேயே மனம் நிரம்பிவிடாது’ என்று எண்ணியபடியே எழுந்துபோய் நகரத்தின் பல பகுதிகள் கண் பார்வையில் படுகிறாற்போல் மாடத்தின் முன்புறம் நின்றுகொண்டு நோக்கினாள் சுரமஞ்சரி.

அவளுடைய பார்வையில் தன்னைப் போலவே யாருக்காகவோ ஏங்கி அழுவது போலத்தான் அந்த நேரத்தில் மேற்குத் திசை வானமும் தெரிந்தது. பக்கத்து வீதியாகிய அரச வீதியின் மாளிகை ஒன்றிலிருந்து யாரோ ஓர் இசைக் கலைஞன் வேய்ங்குழலில் சோகத்தைப் பேசும் நோதிறப் பண்ணை வாசித்துக் கொண்டிருந்தான். தன் மனத்தில் ஏங்கி ஏக்கற்றுத் தவிக்கும் சோகத்தையும், மேற்கு வானில் காட்சியாய்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/104&oldid=1231534" இலிருந்து மீள்விக்கப்பட்டது