பக்கம்:மணி பல்லவம் 4.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

717

றையும் பெற முடியாத துர்ப்பாக்கியவதியாக இப்படி நான் எப்போது மாறினேன்?

சிந்தனையில் இப்படி ஆயிரம் எண்ணங்கள் சேர்ந்தும் பிரிந்தும் தவித்திட விளக்குச் சுடர்களைத் தணித்துவிட்டு மங்கலான இருளைப் பரவச் செய்து கொண்டபின் மஞ்சத்தில் சாய்ந்து படுத்தாள் சுரமஞ்சரி. பொற்பேழை நிறைய நெய் அதிரசங்களும், பல்சுவைப் பணியாரங்களும், பழங்களும், வற்றக் காய்ச்சிய பாலும் கொண்டு வந்து வைத்துக்கொண்டு சுரமஞ்சரியை உண்ணுவதற்கு அழைத்தான் தோழி வசந்தமாலை.

“தோழி! நீ கொண்டு வந்திருக்கும் உணவுகள் என் மனத்தின் பசியை ஆற்றுவதற்குப் பயன்படாதவை. இவற்றைக் கொண்டுபோய்விடு. எனக்கு இவற்றில் விருப்பமில்லை. இந்த மஞ்சத்தில் சாய்ந்துகொண்டு இப்படியே ஏதாவது மனதிற்குப் பிரியமான நினைவுகளை எல்லாம் நினைக்க வேண்டும் போல் இருக்கிறது எனக்கு. நன்றாகத் தூங்கியும் விடாமல் நன்றாக விழித்துக் கொண்டுமிராமல் எவையேனும் நினைவுகளில் மிதக்க ஆசைப்படுகின்றேன் நான்” என்று தோழிக்கு மறுமொழி கூறினாள் சுரமஞ்சரி. தோழி இதைக் கேட்டு மறுபேச்சுப் பேசாமல் திரும்பிப் போய்விட்டாள்.

சுரமஞ்சரி இரண்டு புறக்கண்களையும் மூடிக் கொண்டு மனக் கண்களால் தான் விரும்பிய முகத்தை யும் எண்ணங்களையும் காணலானாள். சில நாழிகைகளில் அப்படியே சோர்ந்து போய்த் தூங்கியும்விட்டாள். அவளுடைய அந்தத் துாக்கத்தில் அதற்கு முந்திய நினைவுகளோடு தொடர்புடைய கனவு ஒன்று நிகழ்ந்தது.

ஆலமுற்றத்துக் கோவிலில் முல்லையும் இளங் குமரனும் அருகருகே நின்று கொண்டிருக்கிறார்கள். முல்லை இளங்குமரனுடைய கழுத்தில் மணமாலை சூட்டுவதற்காகத் தன் பொற்கரங்களை உயர்த்துகிறாள். அப்போது தொலைவிலிருந்து தானும் ஒரு மண மாலையோடு சுரமஞ்சரி இளங்குமரனை நோக்கி ஓடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/108&oldid=1231538" இலிருந்து மீள்விக்கப்பட்டது