பக்கம்:மணி பல்லவம் 4.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

759

வாழும்போது நகைவேழம்பர் என்ற பெயருக்கேற்ப இவர் முகத்தில் நான் சிரிப்பையே பார்த்ததில்லை. ஆனால் சாவதற்கு முன்போ ‘மரணத்தைக்கூடச் சிரித்தபடியே என்னால் சந்திக்க முடியும்’ என்று என்னிடமே சிரித்துக்கொண்டு சொன்னார் இவர். செத்த பின்போ இவருடைய சாவே இப்படி சிரிப்புக் குரியதாகிவிட்டது.”

“இருக்கலாம்! ஆனால் இவரைப்போல் ஒருவர் துணையாக நின்று உதவியிராவிட்டால் இவர் யாருக்குத் துணை நின்று உதவினாரோ அவருடைய செல்வச் செழிப்பு நிறைந்த பெருவாழ்வே இதற்குள் ஊர் சிரித்துப் போயிருக்கும்” என்றாள் பைரவி. இயல்பாகவே விகாரமாயிருந்த அவள் முகம் இந்த வார்த்தைகளைச் சொல்லும்போது இரத்த வெறி கொண்டு குமுறுவது போல் இன்னும் கொடுமையாகத் தோன்றியது. பெருநிதிச் செல்வரைப் பழிவாங்கும் பொறுப்பை உன்னிடம் ஒப்படைப்பதற்காகத்தான் உன்னை அவர் இங்கே கூப்பிட்டனுப்பினார்’ என்னும் உண்மையை அந்தப் பேய் மகளிடம் இப்போது. தானே கூறி விடலாமா என்று எண்ணினான் அருவாளன். ஆனால் தானே அதைக் கூறுவது பொருந்தாது என்று நினைத்து உடனே அடக்கிக் கொண்டான். கண்களில் நீர் கலங்க அந்தப் பேய் மகள் காளிகோட்டத்துப் பலிபீடத்தின் அருகே கன்னத்தில் கை ஊன்றி அமர்ந்து விட்ட சமயத்தில் மெல்ல மெல்ல இருள் வெளி வாங்கிக் கிழக்கு வெளுக்கத் தொடங்கியிருந்தது.

தாங்கள் பெருநிதிச் செல்வருக்குக் கொடுத்துவிட்டு வந்திருந்த வாக்கு நினைவு வரவே அருவாளனும், அவன் தோழனும் மெல்ல அங்கிருந்து நழுவினர், காளிகோட்டத்தில் நகைவேழம்பருடைய கோர மரணத்தைக் கண்டு விட்டுப் பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது அருவாளனுடைய மனம் மிகவும் தளர்ந்து போயிருந்தது. தான் இன்றுவரை வாழ்ந்ததும் இனிமேல் வாழப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/150&oldid=1231572" இலிருந்து மீள்விக்கப்பட்டது