4. புரூரவசுவும் ஊர்வசியும்
புரூரவசு அரசன் சிறந்த விஷ்ணு பக்தன். அந்த அரசன் நாள் தோறும் விஷ்ணுவைப் பூசித்து வணங்கி வந்தான். அதனால் விஷ்ணு வின் திருவருள் அவனுக்கு இருந்தது. ஒரு நாள் அவ்வரசன் ‘நந்தனவனம்' என்னும் பெயருள்ள சோலைக்குப்போய் அச்சோலையின் இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தான். கடம்பு, வேங்கை, ஆல், அரசு, மருது, புன்னை முதலிய மரங்கள் வானளாவ ஓங்கி வளர்ந்து கண்களுக்குக் காட்சியளித்தன.
கடம்பு, கோங்கு, பூ மருது, கொன்றை, புன்னை மரங்கள் பூத்து நின்றன. குன்றின் மேலிருந்து பாய்ந்து வரும் அருவி சலசலவென்று இனிய ஓசையுடன் பாய்ந்து அவ்விடம் தண்ணென்று குளிர்ந்திருந்தது. மரம் செடி கொடிகளின் எழில் மிக்க காட்சி கண்ணைக் கவர்ந்தது. கிளி, மயில், குயில் முதலான பறவைகள் இங்குமங்குமாகப் பறந்து கூவி விளையாடின. எங்கும் மலர்களின் மணம் வீசிற்று.
இயற்கையாக அமைந்திருந்த குளத்தில் வெண்தாமரை, செந்தாமரை மலர்கள் பூத்துக் காட்சியளித்தன. இன்னொரு குளத்தில் செவ்வல்லி வெள்ளல்லிகள் படர்ந்து பூத்து மகிழ்ச்சி யளித்தன. உயர்ந்து வளர்ந்த முருக்க மரங்களில் கொத்துக் கொத்தாகப் பூத்திருக்கும் சிவந்த மலர்களில் நாறைவாய்ப் பறவைகள் (மைனா) அலகினால் தேனை உறிஞ்சிக்கொண்டிருந்தன. மரக்கிளைகளின் மேல் குரங்குகள் அமர்ந்து காய் கனிகளைப் பறித்துக் கையில் வைத்துக் கடித்துத் தின்றுகொண்டும், கிளை களுக்குக் கிளை தாவிக் குதித்து விளையாடிக் கொண்டு மிருந்தன. மான்கள் துள்ளிக்குதித்து ஓடின. மெல்லிய காற்று வீசி மகிழ்ச்சியளித்தது. இத்தகைய இனிய காட்சிகளைக் கண்டு கொண்டிருந்த அரசன் அந்தச் சோலையில் உலாவிக் கொண்டிருந்தான்.
அந்தச் சமயத்தில், சாபம் நீங்கித் தன் உண்மை உருவத்தை யடைந்த ஊர்வசி என்னும் கந்தர்வப் பெண் தேவலோகத் திலிருந்து அந்த நந்தவனத்துக்கு வந்து அங்குள்ள காட்சிகளைக் கண்டு கொண்டே உலாவிக்கொண்டிருந்தாள். அப்போது புரூரவசுவும் ஊர்வசியும் ஓரிடத்திலே தற்செயலாகச் சந்தித்தார்கள் அவர்களுக்குக்