உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. நாட்டியப் பெண் தேசிகப் பாவை

பஃலவ தேசத்தின் அரசனான உலோக பாலன், சந்திராபம் என்னும் தன்னுடைய எழில்மிக்க நகரத்தில் வாழ்ந்திருந்தான். அப்போது சீவக குமரன் என்னும் ஒரு அரச குமரன் அவனிடம் விருந்தினனாக வந்து சில காலம் தங்கினான். விருந்தினனான சீவககுமரன் ஏமாங்கத நாட்டின் அரசன். ஆனால், அவனுடைய நாட்டைக் கட்டியங்காரன் கைப்பற்றிக்கொண்டபடியால் அவன் தான் இழந்த அரச பதவியை மீட்டுக்கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தான். அவன் பல நாடுகளுக்குஞ் சென்று நண்பர் களைச் சந்தித்துக் கொண்டிருந்தபோது, உலோக பாலனிடத்தில் வந்து சில நாட்கள் அவனுடன் தங்கினான்.

உலோக பாலனுடைய அரண்மனையில் அவ்வப்போது நாடகங்களும் நடனங்களும் இசைப் பாட்டுகளும் நடப்பது வழக்கம். அந்த நகரத்தில் பேர் போன நாட்டியக்காரியான தேசிகப்பாவை என்னும் கணிகைப்பெண் வழக்கமாக அரண் மனைக்கு வந்து நடனம் ஆடினாள். தேசிகப் பாவை எழில் உள்ளவள். இசைக் கலையிலும் நாடகக் கலையிலும் வல்லவள். அவளுடைய நாட்டியத்தைக் காண்ப தற்கு நகரப்பெருமக்களும் அரசனும் அமைச்சரும் வந்திருந்தார்கள். விருந்தினனான சீவக குமரனும் நாடக அரங்கத்துக்கு வந்திருந்தான். தேசிகப் பாவையின் கூத்து எல்லோருடைய மனத்தையுங் கவர்ந்தது யாழுங் குழலும் மத்தளமும் தாளமும் பாட்டுக்கு இசைய முழங்கிப் பாட்டுக்கு ஏற்ப தேசிகப் பாவை அபினயம் பிடித்து ஆடினாள்.

குழலெடுத்து யாத்து மட்டார் கோதையில் பொலிந்து மின்னும் அழலவிர் செம்பொற் பட்டம் குண்டலம் ஆரம் தாங்கி நிழலவிர் அல்குற்காசு சிலம்பொடு சிலம்ப நீள்தோள் அழகி கூத்தாடு கின்றாள் அரங்கின்மேல் அரம்பை யன்னாள் (சீவகசிந்தாமணி, பதுமையார் இலம்பகம், 89)

தண்ணுமை முழவம் வீணை குழலோடு குயிலத் தண்பூம் கண்ணோடு புருவம் கைகால் கலையல்குல் நுசுப்புக் காமர் ஒண்ணுதல் கொண்ட ஆடல் தொட்டிமை யுருவம் நோக்கி வெண்ணெய் தீ யுற்றவண்ணம் ஆடவர் மெலிகின் றாரே

(சீவகசிந்தாமணி, பதுமையார் இலம்பகம், 90)