தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்
திருவிக்கிரமன்
127
இடம் : திருவாங்கூரைச் சேர்ந்த வாழ்விச்ச கோட்டம். இவ்வூர்ப் பகவதி கோவிலின் முகமண்டபத்தில் உள்ள வட்டெழுத்துச் சாசனம்.
பதிப்பு : திருவாங்கூர் சாசனங்கள்: ஆறாந்தொகுதி,எண்125.
(No. 125. T. A. S. Vol. VI. Part II. )
விளக்கம் : இந்தக் கிராமத்தின் பெயராகிய வாழ்விச்ச கோட்டம் என்பது வாள்வைத்த கோட்டம் என்பதன் திரிபு. கோட்டம் - கோவில். இவ்வூர்ப் பகவதி கோவிலில் உள்ள உருவம் கொற்றவையின் (மகிடாசுரமர்த்தினியின்) உருவம். கொற்றவை, போர்வீரர்களின் வெற்றித் தெய்வம். ஆகையினாலே, போரை வென்ற அரசன் தனது வெற்றிவாளைக் கொண்டுவந்து, கொற்றவையின் முன்பாக இரத்தத்தைக் கழுவிக் கறைபோக்கி வைப்பது வழக்கம். அந்த வழக்கப்படி முன் ஒருகாலத்தில் திருவாங்கூரை அரசாண்ட அரசன் ஒருவன் தன் வெற்றிவாளின் இரத்தக் கறையைக் கழுவி வைத்த கோவில் ஆகையால், இக்கோவிலுக்கு வாள்வைத்த கோட்டம் என்று பெயர் உண்டாயிற்று. பிறகு, இந்தக் கோவிலின் பெயரே இந்த ஊருக்கும் பெயராக அமைந்தது.
கொல்லம் ஆண்டு 795-இல் (கி.பி. 1620-இல்) இரவிவர்மன் காலத்தில் இந்தக் கோவிலின் முன்மண்டபத்தைத் திருவிக்கிரமன் என்பவர் ஒரே கல்லினால் கட்டியமைத்ததை இந்தச் செய்யுள் கூறுகிறது.
சாசனச் செய்யுள்
ஆதியெழு நூற்றுடன்தொண்ணூற்றையா மாண்டி லற்பசியேழ் முற்றசமி யவிட்டம் வெள்ளி
மாதிசைசே ரின்னாளி லிரவி வேந்தன்
மனமகிழ்ப் பகவதிவாள் வைத்த கோட்டத்
தோதிலுறு மிறைவியிருப் பதற்கு மேன்மை யுறும் முகமண்டப மாமதற்கு நாப்பண் மூதறிவா லொருகலின் மண்டபஞ் செய்வித்தான் முல்லை மங்கலவன் திருவிக்கிரமன் தானே.