தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு
வரலாறு
எழுதெழின் மாடத் திடனெலா நூறிக்
கழுதையேர் கையொளிர்வேல் கோலா-வுழுததற்பின் வெள்வரகு கொள்வித் திடினும் விளியாதாற்
கள்விரவு தாரான் கதம்
145
உரை:“சித்திரமெழுதிய அழகிய மாளிகை முழுவதும் இடித்துக் கழுதையே ஏராகவும் கையில் விளங்கும் வேலே கோலாகவும் உழுததற்குப் பின்பு கவடியும் குடைவேலும் வித்தினும் கெடாதால்; தேன் கலந்த மாலையினையுடையவன் கோபம் என்றவாறு
66
தொல்காப்பியத்திலே கூறப்படாத இச்செய்தி, பிற்காலத்து நூலாகிய புறப்பொருள் வெண்பாமாலையில் கூறப்படுகிறது என்பதை முன்னரே கூறினோம். ஆனால், வெண்பா மாலையில் கூறப்பட்ட இச்செய்திக்கு இலக்கியமாகச் சங்க நூல்களிலும் சாசனங்களிலும் சான்றுகள் உள்ளன. இவற்றை ஆராயலாம். நெட்டிமையார் என்னும் புலவர், பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியின் வீரத்தைப் புகழ்கிறார். அவனது வீரச் செய்கைகளில், அப்பாண்டியன் பகைவர் அரண்களை வென்று கைப்பற்றி அவற்றை இடித்துப் பாழ்படுத்திக் கழுதையால் ஏர் உழுத செய்தியைக் கூறுகிறார்:
“கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண்
வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப்
பாழ்செய் தனையவர் நனந்தலை நல்லெயில்’
உரை: “விரைந்த தேர் குழித்த தெருவின்கண்ணே வெளிய வாயையுடைய கழுதையாகிய புல்லிய நிரையைப் பூட்டி உழுது பாழ்படுத்தினை, அவருடைய அகலிய இடத்தையுடைய நல்ல அரண்களை.
(புறம் 15)
அவ்வையார், அதியமான் மகன் பொகுட்டெழினியைப் பாடுங்கால் அதில், அவன் பகைவர் அரண்களைப் போரிலே வென்று கைப்பற்றியதோடு, வீரர்கள் சிந்திய குருதியாகிய நீர் பாய்ந்து ஈரம் புலராதிருந்த அந்நிலத்தை கழுதை பூட்டிய ஏரினால் உழுது கொள்ளையும், வரகையும் விதைத்த செய்தியைக் கூறுகிறார்.