உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. வடக்கிருத்தல்

வடக்கிருத்தல் அல்லது ஸல்லேகனை என்பது சமண சமயக் கொள்கை. உண்ணா நோன்பிருந்து உயிர் விடுவது என்பது இதன் பொருள். வடக்கிருத்தல் எப்போது செய்ய வேண்டும் என்பதை அருங்கலச் செப்பு என்னும் சமண சமய நூல் இவ்வாறு கூறுகிறது.

இடையூறு ஒழிவில்நோய் மூப்பு இவை வந்தால் கடைதுறத்தல் சல்லே கனை.

அஃதாவது பொறுக்க முடியாத மனவேதனையைத் தருகிற இடையூறு, தீராத நோய், மிகுந்த மூப்பு இவை உண்டான காலத்து சல்லேகனை செய்து உயிர் விடலாம் என்பது சமணர் கொள்கை. இரத்தின கரண்டக சிராவகாசாரம் என்னும் வடமொழிச் சமணசமய நூலிலே இதே செய்தி கூறப்படுகிறதோடு, வற்கடம் முதலான பஞ்ச காலத்திலும் சல்லேகனை செய்யலாம் என்று கூறப்படுகிறது.

சல்லேகனை செய்வோர் தருப்பைப் புல்லின்மேல் வடக்கு நோக்கி அமர்ந்து சாகிற வரையில் உணவு கொள்ளாமல் இருக்க வேண்டும். வேண்டுமானால் நீர்மட்டும் உட் கொள்ளலாம். சல்லேகனை இருக்கும்போது எதையும் மனத்தில் நினைக்காமலும் விரும்பாமலும் தூய மனதோடு தீர்த்தங்கரர் அல்லது அருகரைத் தியானித்துக் கொண்டிருக்க வேண்டும். அடுத்த பிறவியில் அரசனாகவோ அல்லது பெருஞ் செல்வனாகவோ அல்லது தேவலோகத்திலே தெய்வப் பிறவி யாகவோ பிறக்க வேண்டும் என்று விரும்புவது கூடாது. அன்றியும், சல்லேகனையால் உடம்புக்கு வருத்தம் உண்டாகும் போது விரைவில் உயிர் நீங்க வேண்டும் என்று கருதவும் கூடாது. இவ்வாறு தூய எண்ணத்தோடு பற்றற்றவராய் இருந்து வீடுபேறு ஒன்றையே நோக்கமாகக் கொண்டு சல்லேகனை இருக்க வேண்டும்.

சல்லேகனை செய்வது தற்கொலை செய்வதற்கொப்பாகும் என்று பௌத்தக் காவியமாகிய குண்டலகேசி கூறுகிறது. இது தற்கொலை யாகாது என்று விடையிறுக்கிறது நீலகேசி என்னும் சமண சமய நூல். நீலகேசி கூறுவது, வருமாறு: