7
ஓம் திருச்சிற்றம்பலம்
அம்பிகாபதி அமராவதி
கடவுள் வணக்கம்
ஒளியுருவாய் ஓவாதே விளங்கியொளிர் ஒளிநடுவே வெளிமருவி அருள்வடிவாம் அம்மையுடன் விரவுதலிற் றெளிமருவு செவ்வொளியுந் திகழ் நீலச்சீரொளியுங் களிபெருகக் கலந்தடியேன் கண்ணுமனமுங் களிக்க அளிபெருகி ஆடல்புரி அம்பலத்தாய் கேளினி! ஒளியுருவில் ஒலியுருவு தோற்றுவித்த தொன்னாளில் தெளிதமிழைப் பிறப்பித்த நின்செயலைத் தேற்றுதற்கோ வளியொலியும் வரிவடிவும் ஓவென்று வழங்கினதே!
ஓவென்ற அவ்வழக்கு ஒலிதமிழ்கே யுரியதுவாய்ப் பாவெந்த மொழிக்கண்ணும் பயிலாத பான்மையினாற் சாவெந்த மொழியும்போல் தமிழ்சாவா தருளினையே!
நாளுலவா வாழ்வன்றி நாளுலந்து மாய்ந்தவரும் மீளுமுயிர் பெறவழங்கும் மென்றமிழின் மெய்ம்மையினை ஆளுடைய பிள்ளையார் அருட்செயலின் அளித்தனையே! நெருப்புருவும் நீருருவும் நிறைந்தநின தருளுருவில் இருப்புடைய கருத்துடையோர் எரிநீரில் அழியாமை திருப்பதிக நாவரையர் செழுந்தமிழிற் றெரித்தனையே! தென்றமிழாம் அமிழ்தூறத் தெளிமேனி வாய்ந்தவர்கள் பொன்றலிலா வடிவுடன்நின் பொன்னுலகு புகுவதனை வன்றொண்டர் வரஅழைத்த வாய்மையினால் வகுத்தனையே!