உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

11

ஆராயுந்தோறும் நாம் அவன்றன் ஆற்றலையும், அருளையும் அறிந்தறிந்து மெய்யறிவு விளக்கப் பெறுகின்றோம் அல்லமோ? பேரறிவுடையோன் ஒருவன் வகுத்த ஒரு நீராவி வண்டியின் அமைப்பையேனும் அல்லது அதுபோன்ற மற்றொரு வியத்தகு பொறியையேனும் நாம் ஆராய்ந்து நோக்குந்தோறும், அவனது அறிவின் திறம் நமக்குப் பெரியதோர் இன்பத்தை விளைத்து நமதறிவையும் விரிவு செய்து விளங்குதல்போல, இறைவன் படைத்த படைப்பின் வழியே அவனது அறிவின் ஏற்றத்தைக் கண்டு நாம் வியந்து மகிழுந்தோறும் நமதறிவும் முறை முறையே விரிந்து பேரொளியோடும் விளங்கா நிற்கும். இவ்வாறு இறைவன்றன் அறிவாற்றல் அருளாற்றல்களை அறிமுகத் தானன்றி, நமக்கு உயர்ந்த அறிவு விளக்கம் உண்டாவதற்கு வேறுவழி இல்லையாதலால், நமக்குக் கடவுளுணர்ச்சி வேண்டா மென்பாரின் வழுக்குரை ஏழை மக்களை அறியாமைப் பாழ்க்குழியில் ஆழ்த்தி அழிப்பனவாமென்றுணர்மின்கள்! இவ்வாற்றாற் சைவசமயமானது மக்களுக்கு

உரிய அறியாமையும், பிறப்பு இறப்பும் இல்லாப் பெருமுதற் கடவுளான சிவபெருமான்றன் அறிவாற்றல் அருளாற்றல்களை விளக்கும் வழியே மக்களெல்லாரையும் பேரறிவு நிலைக்குச் செலுத்துவதோர் ஒப்பற்ற கொள்கையாதலை உணர்ந்து கொண்மின்கள்!

இனிக் ‘கடவுள் ஒருவர்' இருந்தால், அவர், தம்மை மக்கள் வணங்கல் வேண்டுமெனக் கருதார்' என்னும் கருத்துப்பட உரைப்பார் உரையும் பாழுரையாதல் காட்டுதும்: எல்லாம் வல்ல இறைவன் இவ்வுலகத்தையும், இவ்வுலகத்துப் பொருள்களையும் படைத்து, அவற்றின் நடுவே இவ்வியப்பான இவ்வுடம்புகளிற் புகுத்தி நம்மை வாழச் செய்திருக்கும் வகையினை உற்று நோக்கும் நுண்ணறிவாளர், இங்ஙனம் அவன் செய்திருப்பது ஒரு சிறந்த நோக்கம் பற்றியே யல்லாமல் வெறும் பாழுக்காக அன்றென உணர்வர். அச்சிறந்த நோக்கம் யாதோவென்றால், நாம் அறிவும் இன்பமும் இவையென உணர்ந்து, நமக்கு இயற்கையாய் உள்ள அறியாமையுந் துன்பமும் களைந்து, என்றும் அழியாப் பேரின்பத்தில் நாம் நிலைபேறாயிருக்க வேண்டுமென்பதே யன்றோ? உலகத்தின் கண் உள்ள அரிய காட்சிகளையும், இனிய ஒலிகளையுந் தீஞ்சுவைகளையும், நறுமணங்களையும், மென்பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/36&oldid=1584236" இலிருந்து மீள்விக்கப்பட்டது