128
.
- மறைமலையம் -18
தூதுவிடுத்தனர். காமிலியன் வணங்காமுடியனும் இறுமாப் புடையனுமாதலால், தான் தனது நகரினின்றும் துரத்தப் பட்டவனாதலால், உரோம் அரசியல் தலைவரின் உடன்பாடும் கட்டளையும் இன்றித் தான் அவர்க்குத் தலைவனாய் நின்று படை நடத்துதல் இயலாதென மறுமொழி போக்கினான். உரோம் அரசியல் தலைவர்களோ இப்போது கவித்தலை மலைக்கோட்டையினுள் அடைபட்டிருக்கின்றனர். அவர் வெளியேயுள்ள உரோமர்கள் செய்தி விடுத்து அவர்களைத் தமது கருத்துக்கு ஒருப்படுவிக்குமாறு யாங்ஙனம்? காடிய காலவர்களோ அக்கோட்டையைச் சூழப் படைவீடு கொண்டிருக்கின்றனர்! என் செய்வதென்று எல்லாரும் பெரிதும் தயங்கினர்.
கட்கு
இந்நிலையில் ‘கோமினியன்' என்னும் ஓர் இளைஞன் தம்மவர்க்காகக் கவித்தலை மலைக்கோட்டையிலுள்ளார் பால் தூது செல்லுதலை மேற்கொண்டான். தான் தைபர் ஆற்றின் பாலத்தைக் கடந்து செல்லக் கூடாவாறு காலவரின் காவலாள் அதனைக் காத்துநின்றால், தான் ஆழம் மிகுந்து அகன்ற அவ்வியாற்றை நீந்திச் செல்லவேண்டுமே என எண்ணி, ஒரு குடியானவனுக்குரிய உடை உடுத்தித் தான் நீரில் அமிழ்ந்தி விடாமல் மிதத்தற்கு உதவியாகப் பெரியபெரிய நெட்டித் துண்டுகளை அவ்வுடையின்கீழ் இணைத்துக்கொண்டு, நாள் முழுதும் கால்நடையாகவே நடந்து, இராப்பொழுதில் அவ்வியாற்றின் அருகுற்றான். தான் முன் எண்ணியவாறே காலவரின் காவலாள் அதன் பாலத்தைக் காத்து நிற்றல் கண்டு, அதனை விலகிப் போய்த் தனதுடம்பின் மேற்புறத்தில் நெட்டியோடு பிணைத்த துணியைச் சுற்றிக் கட்டிக்கொண்டு அவ்வியாற்றில் இறங்கி நீந்தியபடியாய்க் கவித்தலை மலையடி வாரத்தினருகே சேர்ந்து கரையேறினான். அவ்வடிவாரத்தில் விளக்கு வெளிச்சம் காணப்பட்ட இடங்களையும், மக்கள் பேசும் ஒலிகேட்கும் இடங்களையும் விழிப்பாக விட்டகன்று, பகைவர் இல்லாத இடமாகத் தோன்றிய அம்மலையின் செங்குத்தான ஒரு பக்கத்தைத் தெரிந்தடைந்தான். அப்பக்கம் மிகவும் செங்குத்தாய் இருந்தமையால் அதனூடு எவருமே ஏறி அம்மலைமேல் செல்லல் முடியாதென்று கருதிக் காலவர் படைஞர் எவரும் அங்கே காவலாக வைக்கப்படவில்லை.